Asianet News TamilAsianet News Tamil

கன்னியாகுமரி ஸ்பெஷல் "முந்திரி கொத்து" எப்படி செய்வது? பார்க்கலாம் வாங்க

கன்னியாகுமரியின் ஸ்பெஷல் முந்திரி கொத்து எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து  கொள்ளலாம்

How to make Kanyakumari Special  Munthiri Kothu In Tamil
Author
First Published Nov 13, 2022, 6:36 PM IST

கன்னியாகுமரியில் கடற்கரை, பகவதியம்மன் கோவில் எப்படி பிரசித்தி பெற்றதோ, அந்த வரிசையில் சுவையான முந்திரி கொத்தும் மிக பிரபலம். இதனை தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை தினங்களிலும், திருமணம், வளைகாப்பு, மறு வீடு போகுதல் போன்ற சுப நிகழ்ச்சிகளிலும் செய்யக்கூடிய , தவிர்க்க முடியாத ஒரு ஸ்னாக்ஸ் வகை ஆகும். 

இந்த ஸ்னாக்ஸ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் விதத்தில் சுவையாக இருக்கும். கன்னியாகுமரியின் ஸ்பெஷல் முந்திரி கொத்து எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து  கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

பாசிப்பயிறு- 2 கப் 
வெல்லம் -2 கப் 
அரிசிமாவு- 1 கப் 
தேங்காய் -1/2 முடி (துருவியது)
மைதா மாவு- 2 ஸ்பூன் 
ஏலக்காய் தூள்-1 ஸ்பூன் 
எள் - 1 ஸ்பூன் 
மஞ்சள் தூள்- 1/2ஸ்பூன்
நெய் - 3 ஸ்பூன் 
உப்பு- தேவையானஅளவு
எண்ணெய் - தேவையான அளவு 

கொட்டும் மழையில் க்ரிஸ்ப்பியான "பொட்டேடோ நக்கெட்ஸ்" செய்யலாம் வாங்க

செய்முறை:

அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் எண்ணெய் சேர்க்காமல், பாசிப்பயிரை போட்டு லேசாக வறுத்துக் கொண்டு, அதனை ஆற வைத்து விட்டு, ஒரு மிக்சி ஜாரில் மாற்றி அதனை அரைத்துக் கொண்டு அதனை ஒரு தட்டில் எடுத்துக் கொண்டு அதில் ஏலக்காய் தூள் தூவி வைத்துக் கொள்ள வேண்டும். 

பின் அதே கடாயில் எண்ணெய் சேர்க்காமல்,துருவி வைத்துள்ள தேங்காய் சேர்த்து,நன்கு மணக்கும் படி வறுத்துக் கொண்ட, பின் அதில் சிறிது எள்ளு சேர்த்து கிளறி விட வேண்டும். 

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து, வெல்லம் சேர்த்து அதில் சிறிது தண்ணீர் ஊற்றி,அடுப்பின் தீயினை மிதமாக வைத்து ,பாகு தயார் செய்து கொள்ள வேண்டும். 

பின் பாகினை வடிகட்டி மற்றொரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் அரைத்த பாசிப்பருப்பு மாவு சேர்த்துக் கொண்டு, பின் அதில் வறுத்து வைத்துள்ள தேங்காய் துருவலையும் சேர்த்து, பின் சிறிது நெய் சேர்த்து மீண்டும் நன்றாக கிளறி விட்டு பிசைந்துக் கொள்ள வேண்டும். 

சூடாக பிசைந்து வைத்துள்ள மாவினை கையில் சிறிது நெய் தடவி கொண்டு, சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும். பிடித்த உருண்டைகளை அப்படியே சுமார் 45 நிமிடங்கள் வரை வைத்து விட வேண்டும். 

இப்போது ஒரு பாத்திரத்தில் மைதா, அரிசிமாவு, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விட்டு சிறிது தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு ரெடி செய்து கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் , தீயினை சிம்மில் வைத்து விட்டு, உருண்டைகளை எடுத்து மைதா மாவு கரைசலில் டிப் செய்து எண்ணெய்யில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான முந்திரி கொத்து ரெடி.

Follow Us:
Download App:
  • android
  • ios