Project Cheetah: இந்தியாவின் சிறுத்தை திட்டம்: கட்டுக்கதைகளைத் தகர்க்கும் புதிய ஆய்வறிக்கை
இந்தியாவின் சிறுத்தை திட்டம் குறித்த விமர்சனங்கள் அறிவியல் பூர்வமற்றவை மற்றும் தவறான தகவல்களில் வேரூன்றியவை என்று ஒரு புதிய ஆய்வறிக்கை கூறுகிறது. திட்டம் அவசரமாகத் தொடங்கப்படவில்லை எனவும் சொல்கிறது.

சிறுத்தை திட்டம்
இந்தியாவில் 70 ஆண்டுகளுக்கு முன் அழிந்துபோன சிறுத்தைகளை மீண்டும் கொண்டுவரும் 'சிறுத்தை திட்டம்' (Project Cheetah) குறித்த விமர்சனங்கள் கருத்தியல் ரீதியாக சார்பு கொண்டவை, அறிவியல் பூர்வமாக ஆதாரமற்றவை, தவறான தகவல்களில் வேரூன்றியவை என்று திங்கள்கிழமை வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வறிக்கை வாதிடுகிறது.
'ஃபிரான்டியர்ஸ் இன் கன்சர்வேஷன் சயின்ஸ்' (Frontiers in Conservation Science) இதழில் ‘இந்தியாவின் சிறுத்தை திட்டம் குறித்த கட்டுக்கதைகள் மற்றும் தவறான தகவல்களை அம்பலப்படுத்துதல்’ (Beyond rhetoric: debunking myths and misinformation on India's Project Cheetah) என்ற தலைப்பில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. விலங்கு நலன், அறிவியல் நம்பகத்தன்மை, திட்டத்தின் சமூக தாக்கம் தொடர்பான கவலைகளை இந்த ஆய்வறிக்கை நிவர்த்தி செய்துள்ளது.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NTCA) உறுப்பினர் செயலர் ஜி.எஸ். பரத்வாஜ் உள்ளிட்ட சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகளால் இந்த அறிக்கை எழுதப்பட்டுள்ளது. ஆக்கபூர்வமான விமர்சனம் அவசியம் என்றாலும், சிறுத்தை திட்டம் குறித்த விவாதத்தில் எதிர்மறை விளைவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என ஆய்வறிக்கை சொல்கிறது.
பொமா வேலி அமைப்பு (soft-release bomas) பயன்பாடு, நெறிமுறை கவலைகள், கால்நடை மருத்துவ தலையீடுகள் போன்ற முக்கிய அம்சங்களை விமர்சகர்கள் தவறாக சித்தரித்துள்ளனர் என்றும் அதேசமயம் திட்டத்தின் அளவிடக்கூடிய முன்னேற்றங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் புறக்கணித்துள்ளனர் என்றும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
சிறுத்தைகள் கூண்டில் அடைக்கப்பட்டதா?
சிறுத்தைகள் கூண்டில் அடைக்கப்பட்டுள்ளன என்பதே அடிக்கடி எழும் விமர்சனங்களில் ஒன்றாகும். ஆனால், மத்தியப் பிரதேசத்தின் குனோவில் உள்ள சிறுத்தைகள் செயற்கை கட்டமைப்புகளில் வைக்கப்படவில்லை. அவை மனிதர்கள் உணவு வழங்குவதை சார்ந்து இல்லை என்று அறிக்கை கூறியுள்ளது. மாறாக, அவை ஆரம்பத்தில் பொமாக்கள் (bomas) எனப்படும் வேலியிடப்பட்ட இயற்கை அடைப்புகளில் வைக்கப்பட்டன. இது மாமிச உண்ணிகளை மீண்டும் அறிமுகப்படுத்துவதில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட முறையாகும்.
இந்த பொமாக்கள் சிறுத்தைகள் "சுயமாக வேட்டையாடவும், இயற்கையான நடத்தைகளை வெளிப்படுத்தவும், அதே நேரத்தில் அவற்றின் புதிய சூழலுக்கு பழக்கப்படவும் அனுமதிக்கின்றன" என்றும் அறிக்கை விளக்குகிறது. இந்த முறை "இந்தியாவில் சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் முயற்சியில் வெற்றி வாய்ப்புகளை 2.5 மடங்கு அதிகரிக்கும்" என்று சர்வதேச ஆய்வுகள் காட்டுவதாகவும் ஆய்வறிக்கையின் ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குனோவில் சிறுத்தை குட்டிகள் இனப்பெருக்கம்
குனோவில் சிறுத்தைகள் குட்டிகள் இடுவது 'பிணைக்கப்பட்ட இனப்பெருக்கம்' என்று சில விமர்சகர்கள் விவரித்துள்ளனர். இருப்பினும், இந்த கூற்றை ஆய்வறிக்கை கடுமையாக நிராகரித்துள்ளது.
"கட்டுப்படுத்தப்பட்ட சூழல்களில் கூட சிறுத்தைகளை இனப்பெருக்கம் செய்ய கட்டாயப்படுத்த முடியாது" என்று அறிக்கை கூறியுள்ளது. மேற்கத்திய உயிரியல் பூங்காக்கள் வெற்றிகரமான இனப்பெருக்கத்தை அடைய நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக எடுத்துக் கொண்டதையும் அறிக்கை மேற்கோள் காட்டியுள்ளது. இதற்கு மாறாக, "குனோவிற்குக் கொண்டுவரப்பட்ட சிறுத்தைகளின் ஆறு குட்டிகள் 2.5 ஆண்டுகளில் வெற்றிகரமாக 25 குட்டிகளை ஈன்றன… இது சிறுத்தைகள் மன அழுத்தம் இல்லாத, கிட்டத்தட்ட இயற்கையான சூழலில் இருப்பதை நிரூபிக்கிறது" என்று அறிக்கை தெரிவித்துள்ளது.
குனோவில் பிறந்த குட்டிகள் எந்தவித மனித தலையீடும் இல்லாமல் அவற்றின் தாய்மார்களாலேயே முழுமையாக வளர்க்கப்படுகின்றன என்றும் அறிக்கை கூறியுள்ளது.
சிறுத்தை இறப்பு விகிதம் எதிர்பார்த்ததை விட குறைவு
சிறுத்தைகளின் இறப்புகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த NTCA, இறப்பு என்பது எந்தவொரு இடமாற்ற முயற்சியின் இயற்கையான மற்றும் எதிர்பார்க்கப்படும் ஒரு பகுதி என்று கூறியுள்ளது.
"குனோவில் சிறுத்தைகளின் இறப்பு விகிதம் எதிர்பார்க்கப்பட்ட 50 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது" என்று அறிக்கை தெரிவித்துள்ளது. உண்மையில், "குனோவில் வயது வந்த சிறுத்தைகளின் உயிர் பிழைப்பு விகிதம் முதல் ஆண்டில் 70 சதவீதமாகவும், இரண்டாம் ஆண்டில் 85.71 சதவீதமாகவும் இருந்தது."
குட்டிகளைப் பொறுத்தவரை, 2.5 ஆண்டுகளில் உயிர் பிழைப்பு விகிதம் 66.67 சதவீதமாக இருந்தது. காட்டுப் பகுதியில் அதிக குட்டி இறப்பு விகிதம் இருக்கும் நிலையில், இது ஒரு "முக்கியமான புள்ளிவிவரம்" என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும், எதிர்பாராத சவால்கள், பருவமற்ற குளிர்கால ரோமம், உண்ணி தொல்லைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நோய்த்தொற்றுகள் ஆகியவை திறந்தவெளி பகுதிகளில் பல இறப்புகளுக்கு வழிவகுத்தன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
திட்டம் அவசரமாக தொடங்கப்படவில்லை
சிறுத்தை திட்டம் அவசரமாகவோ அல்லது அறிவியல் அடிப்படையின்றி தொடங்கப்பட்டதாகவோ கூறப்படும் கருத்தையும் அவர்கள் மறுத்துள்ளனர்.
"இந்தியாவில் சிறுத்தைகளை அறிமுகப்படுத்தும் முடிவு அவசரமாக எடுக்கப்படவில்லை" என்று அவர்கள் எழுதினர். 2009 ஆம் ஆண்டிலேயே IUCN நிபுணர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டதையும் அவர்கள் குறிப்பிட்டனர். அதைத் தொடர்ந்து, தள மதிப்பீடுகள் மற்றும் நோய் ஆபத்து பகுப்பாய்வுகள் உட்பட அடுத்தடுத்த மதிப்பீடுகள் சர்வதேச விதிமுறைகளைப் பின்பற்றின.
இந்தியாவின் நிலப்பரப்பு சிறுத்தைகளுக்கு ஏற்றது
இந்தியாவின் நிலப்பரப்பு சிறுத்தைகளுக்கு ஏற்றதா என்று விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், சிறுத்தைகள் முன்பு நினைத்ததை விட மிகவும் தகவமைப்பு திறன் கொண்டவை என்று உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் குனோவில் இருந்து கிடைத்த ஆரம்ப தரவுகளை அதிகாரிகள் மேற்கோள் காட்டியுள்ளனர்.
"சிறுத்தைகள் சவானா நிபுணர்கள் என்ற கருத்துக்கு மாறாக, பல ஆய்வுகள் பல்வேறு வாழ்விடங்கள் மற்றும் இரையின் வகைகளுக்கு அவற்றின் தகவமைப்பு திறனை வெளிப்படுத்துகின்றன" என்று அறிக்கை கூறியுள்ளது.
மருத்துவ தலையீடுகளின் எண்ணிக்கையை (90 மயக்க மருந்துகள்) விமர்சகர்கள் குறிப்பிட்டாலும், இது "ஒரு சிறுத்தைக்கு ஒரு வருடத்திற்கு இரண்டு மயக்க மருந்துகள்" என்று அறிக்கை கூறுகிறது. இது தேவையான மேலாண்மை தலையீடுகளைக் கருத்தில் கொண்டால் ஒரு நியாயமான எண்ணிக்கையாகும் என்று ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் சமூகங்களுக்கு பலன்
இந்த திட்டம் உள்ளூர் சமூகங்களுக்கு தீங்கு விளைவிப்பதாக விமர்சகர்கள் வாதிட்டுள்ளனர். ஆனால், திட்டத்தின் தொடக்கத்தில் இருந்து "ஒரே ஒரு கிராமம் மட்டுமே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது" என்றும், அதுவும் கிராம சபையின் முழு சம்மதத்துடன் சட்ட விதிகளின் கீழ் நடந்ததாகவும் அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.
வனக் காவலர்கள் அல்லது சிறுத்தை கண்காணிப்பாளர்கள், வழிகாட்டிகள் மற்றும் ஓட்டுநர்கள் போன்ற "வேலைவாய்ப்பு மற்றும் மேம்பட்ட உள்கட்டமைப்பு" உட்பட உள்ளூர் மக்களுக்கு இந்த திட்டம் பலன்களை கொண்டு வந்துள்ளது என்றும் அறிக்கை சேர்த்துள்ளது.
இந்தியாவில் சிறுத்தைகள் அழிந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு, நாட்டில் இந்த பெரிய பூனைகளின் நிலையான எண்ணிக்கையை நிறுவுவதற்காக மத்திய அரசு சிறுத்தை திட்டத்தை தொடங்கியது. இந்த மீண்டும் அறிமுகப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, 20 ஆப்பிரிக்க சிறுத்தைகள் குனோ தேசிய பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன - செப்டம்பர் 2022 இல் நமீபியாவில் இருந்து எட்டு மற்றும் பிப்ரவரி 2023 இல் தென்னாப்பிரிக்காவில் இருந்து 12.
அப்போதிருந்து, இந்தியாவில் 26 சிறுத்தை குட்டிகள் பிறந்துள்ளன, அவற்றில் 19 உயிர் பிழைத்துள்ளன. பதினொரு குட்டிகள் காட்டில் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன, மீதமுள்ளவை குனோவில் உள்ள அடைப்புகளில் உள்ளன.