இம்ரான் கான் பாகிஸ்தானை காப்பாற்றுவாராம்! சிறையில் இருந்து விடுவிக்க ஆதரவாளர்கள் அடாவடி!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சிறையில் இருந்து விடுவிக்க அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Protest in Pakistan to release Imran Khan from jail
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஊழல் வழக்கில் 14 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக ஆகஸ்ட் 5, 2023 அன்று கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, பின்னர் அரசு ரகசியங்களை கசியவிட்டதற்காக 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அரசு ரகசியங்களை கசியவிட்டது முதல் அரசு பரிசுகளை விற்றது வரை 100க்கும் என மேற்பட்ட வழக்குகளில் அவர் மீது குற்றசாட்டுகள் உள்ளன.
இந்தியாவின் தாக்குதலில் நிலைகுலைந்த பாகிஸ்தான்
இந்நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பயங்கரவாதிகளை களையெடுத்த இந்தியா மீது பாகிஸ்தான் தேவையில்லாமல் தாக்குதல் நடத்தி வருகிறது. அப்பாவி மக்களை கொல்கிறது. இதற்கு நமது ராணுவம் வலுவான பதிலடி கொடுத்து வருவதால் பாகிஸ்தான் அதை தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறி வருகிறது. இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தானின் பல்வேறு நகரங்கள் நிலைகுலைந்து போயுள்ளன. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உயிர் பயத்தில் எங்கே பதுங்கி இருக்கிறார்? என்றே தெரியவில்லை.
தனது சுயநலத்தால் இந்தியாவுடன் போரிட்டு நாட்டை அழிவுப்பாதைக்கு கொண்டு சென்று விட்டதாக பாகிஸ்தான் இராணுவத் தலைவர் ஜெனரல் அசிம் முனீரை அந்நாட்டு மக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த இக்கட்டான நிலையில், பாகிஸ்தானை காப்பாற்ற இம்ரான் கானால் மட்டுமே முடியும். அவரை சிறையில் இருந்து வெளியே விடும்படி பாகிஸ்தான் அரசுக்கு எதிராக அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர்.
இம்ரான் கானை சிறையில் இருந்து விடுக்க கோரிக்கை
இவர்களுடன் நெட்டிசன்களும் சேர்ந்து இம்ரான் கானை சிறையில் இருந்து விடுவிக்க வலியுறுத்தி வருகின்றனர். ''பதட்டமான இந்த நேரத்தில் பாகிஸ்தானுக்கு உதவக்கூடிய ஒரே அரசியல்வாதி இம்ரான் கான் தான்'' என்று அவர்கள் கூறுகின்றனர். ''பாகிஸ்தானின் உண்மையான அதிகாரத்தையும் குரலையும் மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வாருங்கள். பாகிஸ்தானுக்கு இம்ரான் கான் தேவை'' என்று சில நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
இம்ரான் கானை விடுவிக்க நீதிமன்றத்தில் வழக்கு
''இம்ரான் கான் இப்போது காலத்தின் தேவை. ஒரு மனிதர். ஒரு தேசம். ஒரு குரல்'' என்று சிலர் தெரிவித்துள்ளனர். ''உங்கள் ஈகோவை கைவிடுங்கள். இம்ரான் கானிடம் பேசுங்கள். அவரை வெளியே கொண்டு வாருங்கள். இந்த நெருக்கடியை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து உங்களுக்கு ஆலோசனை வழங்க அவரை வெளியே அழைத்து வாருங்கள். ஏனென்றால் கடினமான தேர்வுகளைச் செய்ய உங்களுக்கு தைரியம் இல்லை'' பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு இம்ரான் கான் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இம்ரான்கான் அடைத்து வைக்கப்பட்டுள்ள சிறை மீது இந்தியா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால் அவரை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.