600 ஆண்டு பழமையான புத்தகம் மாயம்... அமெரிக்க நூலகத்தில் மெகா புத்தகத் திருட்டு!
கலிபோர்னியா பல்கலைக்கழக நூலகத்திலிருந்து ₹1.9 கோடி மதிப்புள்ள அரிய சீன கையெழுத்துப் பிரதிகளைத் திருடியதாக 38 வயது நபர் மீது வழக்குப் பதிவு. போலியான பிரதிகளை வைத்துவிட்டு அசல் புத்தகங்களைத் திருடியதாகக் கூறப்படுகிறது.

கலிபோர்னியா நூலகம்
கலிபோர்னியாவில் உள்ள ஒரு நூலகத்திலிருந்து 216,000 டாலர் (சுமார் ரூ.1.9 கோடி) மதிப்புள்ள அரிய சீன கையெழுத்துப் பிரதிகளைத் திருடியதாக, 38 வயதுடைய ஒரு நபர் மீது அமெரிக்க அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
புத்தகத் திருடன் ஜெஃப்ரி யிங்
சந்தேக நபரான ஜெஃப்ரி யிங் (Jeffrey Ying) என்பவர், பல புனைப் பெயர்களைப் பயன்படுத்தி, கலிபோர்னியா பல்கலைக்கழகம், லாஸ் ஏஞ்சல்ஸ் (UCLA) நூலகத்தில் இருந்த பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய அரிய புத்தகங்களை எடுத்துள்ளார். இதில், 600 ஆண்டுகளுக்கு முந்தைய கையெழுத்துப் பிரதிகளும் அடங்கும். இந்தப் புத்தகங்களுக்குப் பதிலாக, அவர் போலியான பிரதிகளை நூலகத்தில் திருப்பி அளித்ததாகக் கூறப்படுகிறது. இவர் பே ஏரியாவில் உள்ள ஃபிரீமாண்ட்டைச் சேர்ந்தவர்.
சீன கையெழுத்துப் பிரதிகள்
இந்த நூலகத்தில், பல அரிய சீன கையெழுத்துப் பிரதிகள் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் ஆரம்பகட்ட விசாரணையில், 'ஆலன் ஃபுஜிமோரி' என்ற பெயரில் ஒரு பார்வையாளர் இந்தப் புத்தகங்களை கடைசியாகப் பார்த்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் நடத்திய சோதனையில், திருடப்பட்ட புத்தகங்களுக்குப் போலியான பிரதிகளை உருவாக்கப் பயன்படுத்தக்கூடிய லேபிள்கள் மற்றும் அடையாள அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
சிக்கிய போலிப் பிரதிகள்
ஜெஃப்ரி யிங் தங்கியிருந்த ஹோட்டலில் போலீசார் சோதனை செய்தபோது, அவர் நூலகத்தில் இருந்து எடுத்துச் சென்ற அரிய புத்தகங்களைப் போன்ற வெற்று கையெழுத்துப் பிரதிகள் சிக்கின. யிங், நூலகத்தில் இருந்து அரிய புத்தகங்களை எடுத்த பிறகு அடிக்கடி சீனாவுக்குச் சென்று வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
பல பெயர்களில் நூலக அட்டைகள்
அவருக்கு பல பெயர்களில் வழங்கப்பட்ட நூலக அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. முக்கிய கலைப்படைப்பு திருட்டு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். தற்போது அவர் போலீஸ் காவலில் உள்ளார்.
அரிய புத்தகங்கள்
நூலகங்களில் உள்ள அரிய புத்தகங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளை வெளியே எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை, அவற்றைப் பார்வையிட மட்டுமே முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.