- Home
- Cinema
- தொலைக்காட்சி
- அரைச்ச மாவையே அரைக்குறாங்க... ரொம்ப போர்! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
அரைச்ச மாவையே அரைக்குறாங்க... ரொம்ப போர்! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை சந்தித்து வருகிறது. இந்த சீரியலில் ஒரே பாணியில் கதைக்களம் நகர்ந்து வருவதால் சலிப்படைந்துவிட்டதாக கூறுகிறார்கள்.

Netizens Slams Ethirneechal Thodargiradhu Serial
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலை திருச்செல்வம் இயக்குகிறார். எதிர்நீச்சல் முதல் பாகத்தில் இருந்த வேகம் இரண்டாம் பாகத்தில் இல்லை என்பதே பலரும் முன்வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது. கடத்தல், கொலை, தலைமறைவு, பழிவாங்குதல் இதனை தான் மாறி மாறி காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆரம்பத்தில் தர்ஷினியை கடத்தி வைத்து கதைக்களத்தை நகர்த்திச் சென்றார்கள். அதன்பின்னர் தர்ஷன் - பார்கவியை சேர்த்து வைக்க முனைப்பு காட்டிய ஜனனியை கடத்தில் கொலை செய்ய திட்டம் போட்டிருந்தார்கள். எவ்வளவு பெரிய குற்றம் செய்தாலும் ஈஸியாக வெளியே வந்துவிடலாம் என்பது இந்த சீரியலில் தான் சாத்தியம்.
லாஜிக் மிஸ்டேக்
ஆதி குணசேகரன் மீது குண்டாஸ் போடப்பட்டது. இதனால் அவர் நிச்சயம் தப்பிக்கவே முடியாது என அனைவரும் நினைத்துக் கொண்டிருக்க, திடீரென அவர் மீதான குண்டாஸ் கேன்சல் செய்யப்பட்டதாக கூறிவிட்டார்கள். இதைப்பார்த்த ரசிகர்கள் கேக்குறவன் கேனப்பயலா இருந்தா கேப்பையில நெய் வடியுதுனு சொல்ற மாதிரி இருக்கு என கழுவி ஊற்றுகிறார்கள். ஏனெனில் இந்த சீரியலில் பல இடங்களில் லாஜிக் மிஸ்டேக் இடிக்கிறது. அமுதா கொலை செய்யப்பட்டு போடப்பட்டிருந்த இடம் ஜனனி தங்கியிருந்த இடத்தை தாண்டி தான் செல்ல வேண்டும். ஜனனி, நந்தினி, சக்தி ஆகியோர் இரவு முழுக்க அங்கு தங்கி இருந்தும் யாராலும் அமுதா உடலை கொண்டு சென்றபோது கவனிக்க முடியலையா என்கிற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.
காணாமல் போகும் கேரக்டர்கள்
அதுமட்டுமின்றி ஓவர் பில்டப்போடு வரும் கேரக்டர்களை எல்லாம் டம்மியாக முடிவுக்கு கொண்டுவருகிறார்கள். அப்படி தான் ஜனனிக்கு பக்கபலமாக இருந்த கலெக்டர் மதிவதினி, ஆதி குணசேகரனை ஜெயிலில் தூக்கிப் போட உதவியாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஜனனி வீட்டாரிடம் பேசிய குற்றத்திற்காக அவரின் கலெக்டர் பதவியே பறிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இவர் ராணாவின் மனைவியாக இருக்கலாம் என்றெல்லாம் பில்டப் விடப்பட்டது. கடைசியில் அவரை டம்மி பீஸ் ஆக்கிவிட்டார்கள். அதேபோல் தான் தற்போது தேவசகாயம் என்கிற கேரக்டர் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவும் கொஞ்ச நாளிலேயே காணாமல் போய்விட வாய்ப்பு உள்ளது.
ரசிகர்கள் அதிருப்தி
இப்படி லாஜிக் மிஸ்டேக், குழப்பமான கதைக்களத்தால் கன்பியூஸ் ஆகி இருக்கும் ரசிகர்கள். சீரியல் குழுவினரை வறுத்தெடுக்கும் விதமாக பதிவுகளையும் போட்டு வருகின்றனர். அதில் ஒரு பதிவில், ஆயுள் தண்டனை பெற்று உள்ளே போன ஒரு கைதி பரோலில் வெளியே வந்து, யாரும் நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு என்னென்னமோ அராஐகங்கள் செய்கிறார், இப்படியும் கூட நடக்குமா என்று நாம் கேட்டுக்கொண்டிருக்கும் போதே... அப்புறம் மறுபடியும் ஜாமீன் வாங்கி விட்டதாக சொல்லிக் கொண்டு அதுக்கும் மேலயும் அட்டகாசம் செய்து விட்டு மறுபடியும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டிய குற்றவாளி இப்படி எல்லாம் பண்ணிட்டிருக்கான்னா அது இந்த ஒரு சீரியலில் மட்டுமே நடக்கும் என தன் ஆதங்கத்தை கொட்டி இருக்கிறார். இப்படி ரசிகர்களே கழுவி ஊற்றும் நிலைக்கு சென்றிருக்கிறது எதிர்நீச்சல்.

