வேலையை குறைக்க வந்ததா? இல்லை உயிரை வாங்குதா? AI-ன் மறுபக்கம்!
AI AI தொழில்நுட்பம் நேரத்தை மிச்சப்படுத்துவதற்கு பதிலாக கார்ப்பரேட் ஊழியர்களின் வேலை நேரத்தை அதிகரிப்பதாக புதிய ஆய்வு தெரிவிக்கிறது. அதிர்ச்சி தரும் உண்மைகள்!

AI
செயற்கை நுண்ணறிவு (AI) அறிமுகமானபோது, அது அலுவலக வேலைகளை எளிதாக்கும் என்றும், நேரத்தை மிச்சப்படுத்தி ஊழியர்களுக்கு ஓய்வு அளிக்கும் என்றும் பெரிதும் நம்பப்பட்டது. கடினமான அறிக்கைகளைத் தயாரிப்பது, மின்னஞ்சல் அனுப்புவது போன்ற வேலைகளை AI பார்த்துக்கொள்ளும் என்பதால், ஊழியர்கள் முக்கியப் பணிகளில் கவனம் செலுத்த முடியும் என கார்ப்பரேட் நிறுவனங்கள் கணக்கு போட்டன. ஆனால், அமெரிக்காவில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வுகள் இதற்கு நேர்மாறான முடிவுகளைக் காட்டுகின்றன.
ஆய்வு சொல்லும் உண்மை
ஹார்வர்ட் பிசினஸ் ரிவ்யூ (Harvard Business Review) வெளியிட்ட தகவலின்படி, ஒரு அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்குள்ள ஊழியர்கள் AI கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கிய பிறகு, அவர்களின் வேலைப்பளு குறைவதற்குப் பதிலாக அதிகரித்துள்ளது. AI உதவியுடன் வேலைகள் வேகமாக முடிந்தாலும், மிச்சமாகும் நேரத்தில் கூடுதல் வேலைகளைச் செய்ய ஊழியர்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள் அல்லது அவர்களாகவே முன்வந்து செய்கிறார்கள்.
கூடுதல் வேலைப்பளு
முன்பெல்லாம் ஒரு குறிப்பிட்ட வேலைக்குத் தனித் தனி ஆட்கள் இருப்பார்கள். ஆனால் AI வந்த பிறகு, 'நம்மால் எல்லாவற்றையும் செய்ய முடியும்' என்ற நம்பிக்கை உருவானதால், ஊழியர்கள் தங்கள் துறை சாராத வேலைகளையும் செய்யத் தொடங்கியுள்ளனர். உதாரணமாக, டிசைனர்கள் கோடிங் (Coding) செய்யவும், தயாரிப்பு மேலாளர்கள் தொழில்நுட்ப பணிகளைச் செய்யவும் தொடங்கியுள்ளனர். இது முதலில் ஆர்வமாக இருந்தாலும், நாளடைவில் பணிச்சுமையை அதிகரித்து மன அழுத்தத்தை உண்டாக்குகிறது.
மறைந்துபோகும் எல்லைகள்
AI கருவிகள் எந்த நேரத்திலும் எளிதாகக் கிடைப்பதால், வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையிலான எல்லை மறைந்து வருகிறது. உணவு இடைவேளையின் போதோ அல்லது வீடு திரும்பும் வழியிலோ கூட, "சும்மா ஒரு பிராம்ப்ட் (Prompt) கொடுத்து வைப்போம்" என ஊழியர்கள் வேலை செய்யத் தூண்டப்படுகிறார்கள். இது பார்ப்பதற்குச் சிறிய விஷயமாகத் தெரிந்தாலும், மூளைக்குத் தேவையான ஓய்வை இது பறித்துவிடுகிறது.
நிறுவனங்களின் பொறுப்பு
வேலை நேரம் அதிகரிப்பது நிறுவனங்களுக்கு லாபகரமாகத் தோன்றலாம், ஆனால் அது நீண்ட கால அடிப்படையில் ஊழியர்களின் திறனைப் பாதிக்கும். 'AI இருக்கிறது என்பதற்காக மனிதர்கள் இயந்திரங்களைப் போல ஓயாமல் உழைக்க வேண்டும் என்பதில்லை' என்பதை நிறுவனங்கள் உணர வேண்டும். முறையான வழிகாட்டுதல்கள் மற்றும் வேலை நேர வரம்புகளை நிர்ணயிப்பதே இதற்குச் சரியான தீர்வாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

