ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? Common DP வைக்க ஸ்டாலின் அழைப்பு
தமிழ்நாட்டின் மண், மொழி, மானத்தைக் காப்பாற்ற 'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், உதயசூரியன் போல ஒன்றிணைந்து எதிர்ப்போம் என்றும் கூறியுள்ளார்.

தமிழர்களின் தனிக்குணம்
"ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன்! நம்மை அடக்க நினைத்தால், நம் மண், மொழி, மானத்தைக் காப்பாற்ற ஒன்றாக நின்று எதிர்ப்போம்!" என்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
இதுதான் தமிழர்களின் தனிக்குணம் என்றும், 'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கத்தின் நோக்கமும் இதுதான் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அணிச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரில் சென்று பரப்புரை மேற்கொள்ளும் 'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கம் தொடர்பாக முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
ஓரணியில் தமிழ்நாடு
அப்போது பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், "'உடன்பிறப்பே வா' நிகழ்ச்சி மூலம் இதுவரை 24 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் ஒன் - டூ - ஒன் சந்திப்பை நடத்தியிருக்கிறோம். 'ஓரணியில் தமிழ்நாடு' முன்னெடுப்பு என்பது திமுகவுக்கான உறுப்பினர் சேர்க்கைக்காக மட்டுமில்லை. தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி இது," என்று குறிப்பிட்டார்.
ஊதினால் அணையும் தீக்குச்சியா?
மேலும், "ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன்! நம்மை அடக்க நினைத்தால், நம் மண், மொழி, மானத்தைக் காப்பாற்ற ஒன்றாக நின்று எதிர்ப்போம்! இதுதான் தமிழர்களின் தனிக்குணம் – 'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கத்தின் நோக்கமும் இதுதான்," என்று அவர் உணர்ச்சிபொங்கப் பேசினார்.
சமூக வலைத்தளங்களில் Common DP
அனைத்து சமூக வலைத்தளங்களான வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் ஆகியவற்றில் 'ஓரணியில் தமிழ்நாடு' – 'Common DP'-யை கட்டாயம் வைத்துக் கொள்ளுமாறு திமுகவினருக்கு ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
'ஓரணியில் தமிழ்நாடு' முன்னெடுப்பை திமுக உறுப்பினர் சேர்க்கைப் பரப்புரை என்று மட்டும் நினைக்க வேண்டாம் என்றும், இது தமிழ்நாட்டு மக்களை மண், மொழி, மானம் காக்க ஒன்றிணைக்கும் ஒரு முன்னெடுப்பு என்றும் அவர் திமுகவினரிடம் தெளிவுபடுத்தினார்.