- Home
- Tamil Nadu News
- நடுங்க வைக்கும் குளிர்! வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம்! போக்குவரத்து சேவை பாதிப்பு! பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவதி
நடுங்க வைக்கும் குளிர்! வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம்! போக்குவரத்து சேவை பாதிப்பு! பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவதி
Tamilnadu Heavy Snow: தமிழகத்தின் பல மாவட்டங்களில் நிலவும் அடர்த்தியான மூடுபனியால் விமானம், ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வாட்டி வதைக்கும் குளிர்
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஜனவரி மாதம் நிறைவடைந்தது. இதனையடுத்து பொங்கலுக்கு பிறகு பகலில் வெயில் வாட்டி வதைப்பதும் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் கடும் பனிபொழிவும் நிலவி வந்தது. ஒரு சில இடங்களில் உறைபனி நிலவியது. இருப்பினும் இலங்கையின் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் குளிர்கால மழை மேகங்கள் காரணமாக இலங்கையில் மழை பெய்து வருகிறது. மேலும், வடக்கு திசையில் இருந்து குளிர் காற்று வங்கக் கடல் வழியாக தரைப்பகுதிக்குள் நுழைகிறது. இதன் காரணமாக இயல்பைவிட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மைனஸ் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைந்து காணப்படுகிறது.
விமான சேவைகள் பாதிப்பு
குறிப்பாக நேற்று முன்தினம் முதல் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் எப்போதும் இல்லாத வகையில் அதிகாலை வேளையில் அடர்த்தியான மூடுபனி நிலவுகிறது. எதிரே வரும் நபர்கள் யார் என்று தெரியாத அளவுக்கு அடர்ந்த மூடுபனி காணப்பட்டது. இதனால் விமானம் மற்றும் ரயில்கள் போக்குவரத்து இரண்டாது நாளாக பாதிக்கப்பட்டது. சென்னைக்கு வரும் விமானங்கள் தரையிறங்க முடியாமல் திரும்பின. சுமார் 40க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டு, பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவதி
அதேபோல் தேசிய நெடுஞ்சாலைகளில் காலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாக ஊர்ந்து சென்றது. ஆகையால் பல்வேறு சாலைகளில் வாகனப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மூடுபனியால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்பவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் அடர்ந்த மூடுபனி இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்கும் என்ற தகவலை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம்
இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை வானிலை நிலவரம்
அதேபோல் நாளை முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும் என தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் மிதமான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

