- Home
- Tamil Nadu News
- அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! ஸ்கெட்ச் போட்டு கொடுத்த மனைவி! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்
அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! ஸ்கெட்ச் போட்டு கொடுத்த மனைவி! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்
Madurai Crime: அதிமுக பிரமுகர் செந்தில்குமார் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் அவரது மனைவியே திட்டம் தீட்டி கொலை செய்தது அம்பலம்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்த சாமநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (36). சாமநத்தம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மற்றும் அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறையின் முன்னாள் ஒன்றிய செயலாளராக இருந்து வந்தார். மேலும் சாமநத்தம் பள்ளிக்கூடம் அருகே டீக்கடையும் நடத்தி வந்தார். இவரது மனைவி காவியா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு செந்தில்குமார் வழக்கம் போல் டீக்கடையை திறக்க வந்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். பின்னர் அங்கிருந்து அந்த கும்பல் தப்பியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் செந்தில்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதற்கட்ட விசாரணையில் டீ கடையில் இரவு நேரங்களில் மது அருந்தியதை தட்டிக்கேட்டதால் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணையில் செந்தில்குமாரின் மனைவி காவியாவுக்கும், அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இரண்டு மாதத்திற்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் காவியாவின் குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் தம்பதியை சேர்த்து வைத்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் காவியா, கார்த்திக்கிடம் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளார். இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.
இந்நிலையில் இனி என் கணவர் உயிருடன் இருந்தால் நாம் சந்தோஷமாக இருக்க முடியாது. ஆகையால் கணவரை கொலை செய்துவிடுமாறு மனைவி கூறியுள்ளார். அதன்படி கார்த்திக், நண்பர்கள் 6 பேருடன் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் இரவு செந்தில்குமாரின் டீக்கடைக்கு வந்துள்ளனர். அப்போது மது அருந்தி விட்டு விடிய, விடிய காத்திருந்த கும்பல் செந்தில்குமாரை, பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்துள்ளனர். காவியா, கள்ளக்காதலன் கார்த்திக் உட்பட 4 பேர் சிலைமான் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை தாலி கட்டிய மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

