- Home
- Tamil Nadu News
- Holiday Special Bus: அடுத்தடுத்து இரண்டு நாட்கள் விடுமுறை! தமிழ்நாடு முழுவதும் சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்துறை!
Holiday Special Bus: அடுத்தடுத்து இரண்டு நாட்கள் விடுமுறை! தமிழ்நாடு முழுவதும் சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்துறை!
கோடை விடுமுறை, முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. சென்னை மற்றும் பிற முக்கிய நகரங்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

வார விடுமுறை, முகூர்த்தம்
தமிழகத்தில் வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்கள், பவுர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களில் தமிழக போக்குவரத்துத்துறை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பயணிகள் சொந்த ஊர் செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோடை விடுமுறை, முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு
இதுதொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: நாளை (வியாழக்கிழமை முகூர்த்தம்), மே 15 (வெள்ளிக்கிழமை), மே 16 (சனிக்கிழமை), மற்றும் மே 17 (ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து எத்தனை பேருந்துகள்?
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை 80 பேருந்துகளும், மே 15ம் தேதி (வெள்ளிக்கிழமை) 620 பேருந்துகளும், 16-ம் தேதி (சனிக்கிழமை) 655 பேருந்துகளும் சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 15 மற்றும் 16-ம் தேதி 120 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து 15 மற்றும் 16-ம் தேதி 25 பேருந்துகளும் மற்றும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
முன்பதிவு அவசியம்
இந்நிலையில், இந்த வார இறுதியில் வியாழக்கிழமை அன்று 5,676 பயணிகளும் வெள்ளிக்கிழமை அன்று 10,853 பயணிகளும் சனிக்கிழமை அன்று 8,421 பயணிகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று 9,759 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கண்காணிக்க சிறப்பு பேருந்துகள்
இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

