- Home
- Tamil Nadu News
- சசிகலா, ராமதாசுடன் தவெக கூட்டணியா? ஒரே போடு போட்டு அரசியல் அரங்கை அதிரவிடும் CTR நிர்மல்குமார்
சசிகலா, ராமதாசுடன் தவெக கூட்டணியா? ஒரே போடு போட்டு அரசியல் அரங்கை அதிரவிடும் CTR நிர்மல்குமார்
TVK Vijay Vs Ramadoss: தவெக ராமதாஸ் அணியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், செங்கோட்டையன் தைலாபுரம் தோட்டத்திற்கு இன்று செல்ல உள்ளதாக தகவல் வெளியானது.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய் அரசியல் வருவகையால் ஒவ்வொரு நாளும் தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முதலில் தவெக - காங்கிரசுடன் கூட்டணி அமைக்க உள்ளதாகவும், ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில் இறுதியில் திமுக கூட்டணியில் இணைந்தது.
என்டிஏ கூட்டணியில் தவெக
அதேபோல் என்டிஏ கூட்டணியில் தவெக இணைய உள்ளதாகவும், 60 சீட் மற்றும் துணை முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளையும் கொடுக்க முன்வந்துள்ளதாக கடந்த ஒருவாரமாக செய்திகள் வெளியாகி வருகிறது. இதுதொடர்பாக தவெக தரப்பில் மறுப்பு தெரிவிக்கவில்லை.
ராமதாஸ் அணியிடம் பேச்சுவார்த்தை
மேலும் தவெக பாமகவை சேர்ந்த ராமதாஸ் அணியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், தவெக நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தைலாபுரம் தோட்டத்திற்கு இன்று செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. அதேபோல் புதிய கட்சி தொடங்கியுள்ள சசிகலாவும் தவெகவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் பொதுமக்களிடையேயும், தொண்டர்களிடையேயும் தொடந்து குழப்பத்தை விளைவிப்பதற்காகவே தவெக கூட்டணி தொடர்பாக ஆதாரமற்ற செய்திகள் திமுகவினரால் பரப்பப்படுகின்றன என சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
சி.டி.ஆர்.நிர்மல்குமார் பரபரப்பு ட்வீட்
இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: சமீபகாலமாக சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அரசியல் லாபத்திற்காக திட்டமிட்டு சில பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பாஜக/அஇஅதிமுக அல்லது திருமதி. சசிகலா, மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்களை தமிழக வெற்றிக்கழகத்துடன் தொடர்புபடுத்தி கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை.
ஆதாரமற்ற செய்திகள்
குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தை, எந்த மட்டத்திலும் நடைபெறவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதே போன்ற பொய்ச்செய்தி உத்தியை காங்கிரசு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளோடு தொடர்புபடுத்தியும் கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்டதும் அது உண்மை இல்லை என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று. இருப்பினும் பொதுமக்களிடையேயும், தொண்டர்களிடையேயும் தொடந்து குழப்பத்தை விளைவிப்பதற்காகவே இத்தகைய ஆதாரமற்ற செய்திகள் திமுகவினரால் பரப்பப்படுகின்றன.
வதந்திகளைப் பகிர வேண்டாம்
பொறுப்புள்ள ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள், செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயாமல் இத்தகைய வதந்திகளைப் பகிர வேண்டாம் என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

