- Home
- Tamil Nadu News
- NDA கூட்டணியில் தவெகவிற்கு 60 சீட்? விஜய்க்கு துணை முதல்வர் பதவியா? உண்மையை போட்டுடைத்த செங்கோட்டையன்!
NDA கூட்டணியில் தவெகவிற்கு 60 சீட்? விஜய்க்கு துணை முதல்வர் பதவியா? உண்மையை போட்டுடைத்த செங்கோட்டையன்!
என்டிஏ கூட்டணியில் தவெகவிற்கு 60 சீட் மற்றும் துணை முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளையும் ஆஃபர் செய்து வருவதாக செய்திகள் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளன.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இதுவரை இல்லாத வகையில் விஜய் வருகையால் தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெகவுடன் இதுவரை எந்த கட்சியும் கூட்டணி அமைக்க முன்வராத நிலையில் தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் திடீரென என்டிஏ கூட்டணியில் இணைவது தொடர்பாக ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் ரெக்க கட்டி பறந்து வருகிறது.
அதாவது என்டிஏ கூட்டணியில் தவெகவிற்கு 60 சீட் மற்றும் துணை முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளையும் ஆஃபர் செய்து வருவதாக செய்திகள் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளன. இந்நிலையில் தவெக விஜய் என்டிஏ கூட்டணியில் சேர்கிறாரா என்பது குறித்து செங்கோட்டையன் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில் தவெக தலைவர் விஜய் உரிய பதிலை அளித்து உள்ளார். முதலமைச்சராக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அனைத்தையும் விட்டு மக்கள் பணிக்காக அரசியலுக்கு வந்து உள்ளார். தற்போது அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் அதிக அளவில் திரண்டு வருவது, தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என்பதை காட்டுகிறது.
மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு நிலைமை சரியாக இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பொதுமக்கள் அச்சத்துடன் வாழும் சூழல் நிலவுகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்ற மன நிலையில் மக்கள் உள்ளனர். மாற்றத்தை கொண்டு வரக் கூடிய திறன் விஜய்க்கு மட்டுமே உள்ளது என்றார்.
234 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடக் கூடிய சிறந்த வேட்பாளர்கள் தவெக கட்சியில் உள்ளனர். தவெக மற்றும் என்டிஏ கூட்டணி குறித்து இதுவரை எந்த விதமான கருத்து பரிமாற்றமும் நடைபெறவில்லை. துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற தகவல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, விஜய் முதலமைச்சராகவே வர வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் அனைத்தையும் விட்டு அரசியலுக்கு வந்துள்ளார். தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு மக்கள் இவ்வளவு அதிகமாக ஆர்ப்பரித்து வருவது இதற்கு முன் பார்த்ததில்லை என்றும் செங்கோட்டையன் கூறினார்.

