- Home
- Tamil Nadu News
- TN New Govt: 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? 500 யூனிட்டுக்கு மேல் இருந்தால் என்ன நிலை? தமிழக அரசு விளக்கம்!
TN New Govt: 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? 500 யூனிட்டுக்கு மேல் இருந்தால் என்ன நிலை? தமிழக அரசு விளக்கம்!
TN New Govt: வீடுகளுக்கு 500 யூனிட்கள் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் என தவெக அரசு தெரிவித்துள்ளது. இதனால் ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த 100 யூனிட் மின்சாரம் இலவசம் நிறுத்தமா? என்ற கேள்விக்கு அரசு விளக்கம் அளித்துள்ளது

200 யூனிட் மின்சாரம் இலவசம்
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பதவியேற்ற விஜய், முதல் நாளே அதிரடி காட்டியிருக்கிறார். முந்தைய அரசின் நிதி கொள்கைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, மக்கள் நலத்திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், தனது முதல் பெரிய அரசாணையில் முதல் கையெழுத்திட்டார். அதாவது தகுதியுள்ள வீட்டு உபயோக நுகர்வோருக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
அதாவது இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்கள் வரை மின்சாரம் பயன்படுத்தும் தகுதியான வீட்டு நுகர்வோருக்கு, மொத்தம் 200 யூனிட்கள் இலவசமாக வழங்கப்படும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. அதே சமயம், 500 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு தற்போதைய கட்டண முறையே தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த திமுக ஆட்சியில் ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படுமா? என்ற சந்தேகம் மகக்ள் மனதில் எழுந்தது.

100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும்
ஆனால் இதற்கு விளக்கம் கொடுத்துள்ள தமிழக அரசு, 500 யூனிட்கள் வரை மின்சாரம் பயன்படுத்தும் தகுதியான வீட்டு நுகர்வோருக்கு, மொத்தம் 200 யூனிட்கள் இலவசமாக வழங்கப்படும். 500 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த, அரசுக்கு ஆண்டுக்குக் கூடுதலாக 1,730 கோடி ரூபாய் மானியச் செலவு ஏற்படும். தொடக்கத்தில், இந்தச் செலவு சட்டமன்ற ஒப்புதல் பெறும் வரை, அரசின் அவசர கால நிதியிலிருந்து (Contingency Fund) முன்பணமாக எடுக்கப்படும். பின்னர், இது 2026-27-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீட்டில் 'புதிய சேவை' (New Service) என்ற தலைப்பில் சேர்க்கப்படும்.
அரசாணையில் கூறப்பட்டுள்ளது என்ன?
இந்த மானியத்துக்கான புதிய கணக்குத் தலைப்புகளுக்கு, தலைமை மின் ஆய்வாளரை (Chief Electrical Inspector) 'மதிப்பீடு, சரிபார்த்தல் மற்றும் கட்டுப்படுத்தும்' அதிகாரியாக அரசு நியமித்துள்ளது. ஒதுக்கப்பட்ட இந்த மானியத் தொகை பணமாகக் கொடுக்கப்படாது. மாறாக, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வைப்புத்தொகைக்கு வரவு வைக்கப்படும் (contra credit) என்று அரசாணையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
மின்சாரச் சட்டம் 2003-ன் பிரிவு 108-ன் கீழ், இதற்கான குறிப்பிட்ட உத்தரவாதங்கள் தனியாக வெளியிடப்படும் என்றும் அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் உரையில் விஜய் மாஸ் பேச்சு
முன்னதாக ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த பதவியேற்பு விழாவில் பேசிய விஜய், தனது சினிமா வாழ்க்கையை விட்டுவிட்டு வந்திருப்பதால், மக்களுக்கு 'பட்ட கடனைத் திருப்பிச் செலுத்துவேன்' என்று உறுதியளித்தார். மேலும், 'நான் ஒன்றும் அரச பரம்பரையில் இருந்து வரவில்லை, தமிழ்நாட்டு மக்களின் குடும்பத்தில் ஒருவனாகவே என்னைப் பார்க்கிறேன்' என்றும் அவர் குறிப்பிட்டார்.
திமுகவை விமர்சித்த விஜய்
தொடர்ந்து பேசிய அவர், முந்தைய திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். 'கடந்த அரசு, 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் வைத்துவிட்டுச் சென்றுள்ளது; அவர்கள் பதவியை விட்டுப் போகும்போது, கருவூலத்தை முழுவதுமாக காலி செய்துவிட்டார்கள். இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் நாங்கள் பொறுப்பேற்றிருக்கிறோம். நான் இதை சும்மா சொல்லவில்லை; உள்ளே சென்று பார்த்தால்தான், என்ன இருக்கிறது, என்ன இல்லை என்பது தெரியும்' என்றார் விஜய்.
'வெளிப்படையான அரசை' நடத்துவோம் என்று உறுதியளித்த முதல்வர், 'நான் எதையும் மறைத்துச் செய்ய மாட்டேன், வெளிப்படையாகவே செய்வேன்' என்றார். மேலும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும், மாநிலத்தின் இளைஞர்களைக் காப்பாற்ற போதைப்பொருட்களை ஒழிப்பதாகவும் அவர் வாக்குறுதி அளித்தார்.

