- Home
- Tamil Nadu News
- TN Rain Alert: தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்கள்? முழு விவரம்!
TN Rain Alert: தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்கள்? முழு விவரம்!
TN Rain Alert: தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எந்தெந்த மாவட்டங்கள்? என்பது குறித்து பார்க்கலாம்.

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் கோடை வெயில் கடுமையாக வாட்டுகிறது. இடையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்த நிலையில், மற்ற இடங்களில் வெயில் கடுமையாக கொளுத்தியது. இதனால் மழை பெய்யதா? வெப்பம் தணியாதா? என மக்கள் ஏங்கித் தவித்து வந்தனர். இந்த நிலையில், மே 1ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பல்வேறு மாவட்டங்களில் கனமழை
அதாவது மே 29ம் தேதி தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மே 30ம் தேதி திருச்சிராப்பள்ளி, நாமக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர், சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
கோவை, திண்டுக்கல்
மே 31ம் தேதி மற்றும் ஜூன் 1ம் தேதியில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், திருப்பத்தூர், திருப்பூர், சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், தர்மபுரி, மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூன் 2ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதே போல் ஜூன் 3ம் தேதி மற்றும் 4ம் தேதியில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் எப்படி?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 39-40° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

