- Home
- Tamil Nadu News
- TN Weather Update: இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் கனமழை! லிஸ்ட்டில் உங்க ஊர் இருக்கானு பாருங்க!
TN Weather Update: இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் கனமழை! லிஸ்ட்டில் உங்க ஊர் இருக்கானு பாருங்க!
TN Weather Update: தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தியெடுத்து வரும் நிலையில், மழை வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எந்தெந்த மாவட்டங்கள்? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

தமிழகத்தில் மழை
தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் வெளியில் வர முடியாத அளவுக்கு கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஓட்டியுள்ள மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்து வெயிலின் தாக்கம் குறைந்து இருந்தாலும் மற்ற இடங்களில் அனல் தகிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதுமில்லை. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2-3° செல்சியஸ் வரை உயர்ந்தும், ஏனைய தமிழகத்தில் இயல்பை ஒட்டியும் இருந்தது. இந்த நிலையில், வெயிலில் இருந்து தப்பிக்கும் விதமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
அதாவது மே 26ம் தேதி கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, சேலம், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மே 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே 31ம் தேதி மற்றும் ஜூன் 1ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும்.
வெயில் எப்படி இருக்கும்?
வெயிலை பொறுத்தவரை மே 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும். நிலையில், கடலோர தமிழகத்தில் ஒரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40-41° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

