தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை.. 'குடி'மகன்கள் ஷாக்!
ஏற்கெனவே தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளில் ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 12 பீர் பாட்டில்கள் அல்லது 7.8 லிட்டர் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அதிரடியாக உத்தரவிட்டு இருந்தது.

டாஸ்மாக் கடைகள்
தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் அதிகரித்து வரும் நிலையில், மது குடிப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. அதுவும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் மது விற்பனை கொடிகட்டி பறக்கிறது.
இந்த பண்டிகை காலங்களில் வெளியாகும் ரஜினி, விஜய், அஜித் திரைப்படங்களில் வசூலை விட டாஸ்மாக் வசூல் அதிகமாக உள்ளது. அரசு வருமானத்தை ஈட்டித் தருவதில் டாஸ்மாக் முக்கிய பங்கு வகிப்பது என்று சொன்னால் அது மிகையாகாது.
டாஸ்மாக் கடைகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை
இந்த நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது மதுபிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவையொட்டி தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை விடப்படுகிறது.
எந்தெந்த நாள் டாஸ்மாக் விடுமுறை?
அதாவது ஏப்ரல் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட உள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், 'தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் ஏப்.21 முதல் ஏப்.23 இரவு வரை மூடப்பட வேண்டும்.
புதுச்சேரி எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கும் இது பொருந்தும். அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் உரிமம் பெற்ற வளாகங்களை சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு ஏப்.21 காலை 10 மணி முதல் ஏப்.23ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை தற்காலிகமாக மூட வேண்டும். இந்த உத்தரவை மீறுவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறப்பட்டுள்ளது.
மது விற்பனைக்கு கட்டுப்பாடு
ஏற்கெனவே தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளில் ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 12 பீர் பாட்டில்கள் அல்லது 7.8 லிட்டர் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அதிரடியாக உத்தரவிட்டு இருந்தது. மேலும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் மது வகைகளை தனிநபருக்கு நாளொன்றுக்கு 4.5 லிட்டர் அளவு தான் விற்பனை செய்ய வேண்டும்.
இதேபோல் வெளிநாட்டு மது வகைகளையும் தனிநபருக்கு நாளொன்றுக்கு 4.5 லிட்டர் அளவு தான் விற்பனை செய்ய வேண்டும். இதற்கான விற்பனை ரசீதை அவர்களிடம் கொடுக்க வேண்டும் என அனைத்து டாஸ்மாக் கடைகளின் மேலாளர்கள், விற்பனையாளர்களுக்கும் டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

