- Home
- Tamil Nadu News
- அஜித்குமார் சம்பவத்தின் வடு மறைவதற்குள் மற்றொரு அதிர்ச்சி சம்பவம்! நடந்தது என்ன? விடாத அண்ணாமலை!
அஜித்குமார் சம்பவத்தின் வடு மறைவதற்குள் மற்றொரு அதிர்ச்சி சம்பவம்! நடந்தது என்ன? விடாத அண்ணாமலை!
திருமலா பால் நிறுவன மேலாளர் நவீன் பஞ்சலால் ரூ.45 கோடி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, விசாரணைக்கு முன்னதாக சடலமாக மீட்கப்பட்டார். இரண்டு வாரங்களாக வழக்கு பதிவு செய்யாமல் விசாரித்த துணை ஆணையர் பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நவீன் பஞ்சலால்
ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் வையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன் பஞ்சலால் (37). இவருக்கு திருமணமாகி குடும்பத்துடன் சென்னை புழல் அடுத்த கதிர்வேடு, பிரிட்டானியா நகர் முதல் தெருவில் வசித்து வந்தார். இவர், சென்னையில் உள்ள திருமலா பால் நிறுவனத்தில் மேலாளராக கடந்த மூன்றரை ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், அண்மையில் திருமலா பால் நிறுவனம் அவர்களது நிறுவன வரவு-செலவு கணக்குகளை சரிபார்த்த அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது ரூ.45 கோடி முறைகேடு செய்திருப்பது தெரியவந்துள்ளது.
திருமலா பால் நிறுவனத்தில் மேலாளர்
இதுதொடர்பாக அந்நிறுவனம் சார்பில் கடந்த மாதம் 25-ம் தேதி கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் பாண்டியராஜனிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்துவதற்காக, நவீன் பஞ்சலாலை செல்போனில் தொடர்புகொண்டு பேசியபோது, அவர், விசாரணைக்கு நாளை வருகிறேன். பணத்தையும் கொடுத்து விடுகிறேன் என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் கெஞ்சி கேட்டுக்கொண்டார்.
பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது
இதுதொடர்பாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: திருமலா பால் நிறுவனத்தின் கருவூல மேலாளராகப் பணியாற்றி வந்த நவீன் என்பவர், அந்த நிறுவனத்தில் பணம் கையாடல் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, சென்னை கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் பாண்டியராஜன் விசாரித்து வந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 27 ஆம் தேதி, நவீன் மீது புகாரளித்த நிலையில், சுமார் இரண்டு வாரங்களாகியும், சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யாமல், துணை ஆணையரே நேரடியாக விசாரித்து வந்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது. துணை ஆணையர் பாண்டியராஜன் தற்போது விடுமுறையில் சென்றிருப்பதும் பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது.
காவல்துறை முதல்வர் கட்டுப்பாட்டில் இல்லை
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார், காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட துயர சம்பவத்தின் வடு மறையும் முன்பே, மீண்டும் காவல்துறை சட்டத்தை மீறிச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்றால், உண்மையில் காவல்துறை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்பதே உண்மை. தமிழக அரசின் உள்துறையைக் கட்டுப்பாட்டில் வைக்க இயலாமல் செயலிழந்து விட்டாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்? உங்கள் பொறுப்பற்ற செயல்பாடுகளால் இன்னும் எத்தனை சட்ட மீறல்களைப் பொதுமக்கள் சகித்துக்கொள்ள வேண்டும்? உங்கள் நிர்வாகத் தோல்விகளுக்கு, வெறும் மன்னிப்பு மட்டுமே போதுமா?
நியாயமான விசாரணை வேண்டும்
உடனடியாக, நவீன் அவர்கள் மரணம் குறித்த நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்றும், இரண்டு வாரங்களாக வழக்குப் பதிவு செய்யாமல், நவீன் மற்றும் அவரது குடும்பத்தினரை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கிய கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.