- Home
- Tamil Nadu News
- தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்? வானிலை மையம் முக்கிய அப்டேட்!
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்? வானிலை மையம் முக்கிய அப்டேட்!
தமிழகத்தில் மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

சுட்டெரிக்கும் வெயில்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வந்த நிலையில் மீண்டும் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி தாண்டி வெயில் சுட்டெரித்து வருவதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் நாளை வெப்பம் அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் ஜூன் 4 முதல் 8ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு
இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதேபோல் இன்று முதல் ஜூன் 04ம் தேதி வரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை வானிலை நிலவரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.