அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு.. மீறினால் ஆப்பு தான்!
Tamilnadu Assembly Election: தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து கடந்த 15ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன.

தமிழக சட்டமன்ற தேர்தல்
பெரும் எதிர்பார்ப்புகள் மத்தியில் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியை நேற்று முன்தினம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அசாம், கேரளா மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டங்களாக அதாவது ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து அன்றைய தினமே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன.
தேர்தல் நடத்தை விதிகள் அமல்
அதாவது தமிழக அரசு தரப்பில் இனிமேல் எந்த புதிய நலத்திட்டங்களையோ, சலுகைகளையோ அறிவிக்கக் கூடாது. அரசுப் பணத்தில் அரசியல் கட்சிகளின் சாதனைகளை விளம்பரப்படுத்தக் கூடாது. அரசு வாகனங்கள், அரசு விருந்தினர் மாளிகைகள் போன்றவற்றைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது. பொது இடங்களில் இருக்கும் அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகள், சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் மறைக்கப்பட வேண்டும். உரிய ஆவணங்கள் இன்றி 50,000 ரூபாய்க்கும் அதிகமான பணத்தை எடுத்துச் செல்லக் கூடாது. அரசியல் கட்சி தலைவர்கள் மதம், ஜாதி அல்லது மொழி அடிப்படையில் வாக்கு சேகரிக்கக் கூடாது போன்ற விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. குறிப்பாக குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கீழ்க்கண்ட விதிகளைத் தவறாமல் பின்பற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. வாட்ஸ்அப் குழு உறுப்பினர்களுக்கான விதிகள்
* தவறான செய்திகள்
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், போலியான கருத்துக்கணிப்புகள் அல்லது எடிட் செய்யப்பட்ட வீடியோக்களைப் பகிர வேண்டாம்.
* வெறுப்புப் பேச்சு
சாதி, மத ரீதியான மோதல்களைத் தூண்டும் விதமாகவோ அல்லது தனிநபர்களின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலோ பதிவிடக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* AI விழிப்புணர்வு
டீப்-பேக் (Deepfake) எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள்/குரல் பதிவுகளைப் பகிர்வது கடுமையான குற்றமாகும்.
2. அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான விதிகள்
அரசுப் பணியாளர் நடத்தை விதிகளின்படி (Conduct Rules), அரசு ஊழியர்கள் முற்றிலும் நடுநிலை வகிக்க வேண்டும்:
* அரசியல் சார்பு
எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவாகப் பிரச்சாரம் செய்யவோ, சின்னங்களைப் பயன்படுத்தவோ கூடாது.
* சமூக ஊடகக் கட்டுப்பாடு
அரசியல் பதிவுகளை Like, Share அல்லது Forward செய்வது கூட விதிமீறலாகக் கருதப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம்.
* நடுநிலைமை
தேர்தல் பணியில் ஈடுபடும்போது எவ்வித பாரபட்சமுமின்றி செயல்பட வேண்டும்.
3. குழு நிர்வாகிகளுக்கான (Admins) பொறுப்பு
குழுவில் பகிரப்படும் ஆட்சேபனைக்குரிய பதிவுகளுக்கு நிர்வாகிகளே பொறுப்பாவார்கள்.தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்க குழுவின் அமைப்புகளை (Only Admins) மாற்றிக்கொள்ளலாம். விதிமீறல் பதிவுகள் கண்டறியப்பட்டால் அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

