- Home
- Tamil Nadu News
- தமிழகத்தில் தூய்மையான, புனிதமான ஆட்சி.. TVKவில் இணைந்தது குறித்து செங்கோட்டையன் விளக்கம்
தமிழகத்தில் தூய்மையான, புனிதமான ஆட்சி.. TVKவில் இணைந்தது குறித்து செங்கோட்டையன் விளக்கம்
தமிழகத்தில் தூய்மையான மற்றும் புனிதமான ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே சகோதரர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தவெகவில் இணைந்தது ஏன்..?
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று தனது ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “தமிழகத்தில் தூய்மையான மற்றும் புனிதமான ஆட்சி அமைய வேண்டும். 2026ல் இளைஞர்களின் எழுச்சியால் ஆட்சி மாற்றம் ஏற்படும். தூய்மையான ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காகவே தமிழக வெற்றி கழகத்தில் இணைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
திமுக, அதிமுக இரண்டுமே ஒன்று தான்
நேர்மையான, தூய்மையான ஆட்சியை நடத்த ஒருவர் தேவை என மக்கள் நினைக்கின்றனர். திமுக, அதிமுக இரண்டுமே ஒன்று தான். இரண்டும் இணைந்து தான் பயணிக்கின்றன. இரண்டு கட்சிகள் மட்டுமே போட்டி போட்டுக் கொண்டிருக்கக் கூடாது. 3வது கட்சி வேண்டும்.
பள்ளி குழந்தைகள் கூட தங்களது பெற்றோரிடம், விஜய்க்கு ஓட்டு அளியுங்கள் என்று கூறும் நிலை தான் தமிழகத்தில் தற்போது உள்ளது. தினம் ஒரு கட்சிக்கு சென்றவன் நான் அல்ல. புதிய மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
எம்ஜிஆர் பாராட்டும் அளவுக்கு பணி செய்தவன்
எங்கள் கட்சியில் சேர வேண்டும் என திமுகவோ, மாற்று கட்சியோ, பாஜகவோ என்னை அணுகவில்லை. தெளிவான முடிவை எடுத்து தான் தவெகவில் இணைந்துள்ளேன். மேலும் ஜெயலலிதாவின் படத்தை பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக் கூடாது என தவெக சொல்லவில்லை. யார் படத்தை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். எம்ஜிஆர்ஆல் ஈர்க்கப்பட்டு அதிமுகவில் இணைந்து அடையாளம் காணப்பட்டவன். எம்ஜிஆர் பாராட்டும் அளவுக்கு பணி செய்தவன் நான்.
மக்கள் மனதில் விஜய் இடம்பிடித்துவிட்டார்
தூய்மையான ஆட்சி தமிழகத்தில் மலர்வதற்காக தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தேன். விஜய்யின் கட்சிக்கு மக்கள் மனதில் ஆதரவு கிடைத்துள்ளது. மக்கள் மனதில் விஜய் இடம்பிடித்து விட்டார்” என்று தெரிவித்துள்ளார்.

