- Home
- Tamil Nadu News
- தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!
தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!
தமிழக அரசியலில் அதிரடி திருப்பமாக சசிகலா இன்று புதிய கட்சி தொடங்கியுள்ளார். அவரது கட்சியின் கொடியில் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் இடம்பெற்றுள்ளன.

புதிய கட்சி தொடங்கினார் சசிகலா
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தோழியும், அதிமுவின் இடைக்கால பொதுச்செயலாளராகவும் இருந்த சசிகலா ஜெயலலிதா பிறந்தநாளான இன்று (பிப்ரவரி 24) புதிய கட்சி தொடங்கியுள்ளார். ராமதாதபுரம் மாவட்டம் கமுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட சசிகலா, தனது கட்சி கொடியை அறிமுகம் செய்தார்.
அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெ. படங்களுடன் கொடி
கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறம் கொண்ட இந்த கொடியில் பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் 'இரும்புப் பெண்' என அழைக்கப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. கட்சி கொடியை அறிமுகம் செய்த சசிகலா, கட்சியின் பெயரை இன்று அறிவிக்கவில்லை. கட்சியின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இபிஎஸ்க்கு எதிராக பொங்கியெழுந்த சசிகலா
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுவின் இடைக்கால பொதுச்செயலாளராக இருந்த சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைவாசம் சென்றார். இதற்கிடையே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டதால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து இபிஎஸ்க்கு எதிராக நின்ற ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோருடன் சேர்ந்து அதிமுக தலைமை மாற வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார்.
யாருக்கு ஆதரவு கொடுக்க போகிறார் சசிகலா?
ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக இபிஎஸ்க்கு எதிராக நின்ற டிடிவி தினகரன், இப்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்து அவருடன் ஐக்கியமாகி விட்டார். இதேபோல் திமுகவின் புகழ்பாடும் ஓபிஎஸ் அக்கட்சியில் விரைவில் இணைய உள்ளார். இதனால் தனி மரமான சசிகலா, அடுத்து என்ன செய்யப் போகிறார்? என்ற கேள்வி எழுந்து வந்தது.
இந்த நிலையில் தான் புதிய கட்சி தொடங்கியுள்ளார் சசிகலா. விரைவில் கட்சியின் பெயரை அறிவிக்கும் அவர் சட்டப்பேரவை தேர்தலில் என்டிஏ கூட்டணிக்கு ஆதரவு கொடுக்க போகிறாரா? இல்லை திமுக கூட்டணிக்கு ஆதரவு கொடுக்கிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

