ரயில் முன் பாய்ந்த ஆர்டிஓ, ஆசிரியை தம்பதி! என்ன காரணம்? வெளியான பரபரப்பு தகவல்!
நாமக்கல்லில் ஆர்டிஓ அலுவலக ஊழியர் சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி ஆசிரியை பிரமிளா ஆகியோர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். கடன் சுமை காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

வட்டார போக்குவரத்து அலவலகம்
நாமக்கல் தில்லைபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (54). இவர் சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலவலகத்தில் (ஆர்டிஓ) பணியாற்றி வந்த நிலையில் 6 மாதங்களுக்கு முன் இடமாறுதல் மூலம் திருச்சி சென்றார். இவரது மனைவி பிரமிளா, ஆண்டாபுரம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
ரயில் முன் பாய்ந்து தற்கொலை
இந்நிலையில் நாமக்கல் அருகே உள்ள வகுரம்பட்டி பகுதியில் சுப்பிரமணி மற்றும் பிரமிளா இருவரும் அதிகாலை ரயில் முன் பாய்ந்தனர். இதில், இருவரும் உடல் சிதறி உயிரிழந்தனர். இதுதொடர்பாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை்க்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மகள் பிரச்சனையால் தற்கொலை
இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் இவர்களது மகள் திருமணத்தில் பெற்றோருக்கும் அவருக்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அவர், திருமணம் வேறு ஒருவரை செய்ய முடிவு எடுத்துள்ளதால் இருவரும் இந்த விபரீத முடிவு எடுத்ததாக கூறப்பட்டது.
கடன் தொல்லை
ஆனால், மகன், மகள் படிப்புக்காக வாங்கிய கடன் சுமை காரணமாக சுப்பிரமணி, மனைவி பிரமிளாவுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். ஆர்டிஓ மற்றும் ஆசிரியை தம்பதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.