- Home
- Tamil Nadu News
- வீடு தேடி வரும் ரேஷன் பொருள்! வெளியான முக்கிய அறிவிப்பு! தேதி குறித்த தமிழக அரசு!
வீடு தேடி வரும் ரேஷன் பொருள்! வெளியான முக்கிய அறிவிப்பு! தேதி குறித்த தமிழக அரசு!
Thayumanavar Thittam: 65 வயதிற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு வீட்டுக்கே வந்து ரேஷன் பொருட்களை டெலிவரி செய்யும் தாயுமானவர் திட்டம் தொடங்கப்பட்டது.

தாயுமானவர் திட்டம்
தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை, கோதுமை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. மக்கள் நேரடியாக ரேஷன் கடைகளுக்கு சென்று நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பொருட்களை வாங்கி வருகின்றனர். ஆனால் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளால் ரேஷன் பொருட்களை வரிசையிலும், நேரில் சென்று வாங்க முடியாத சூழல் ஏற்படுகிறது. இதுதொடர்பாக முதல்வருக்கு பல்வேறு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு 65 வயதிற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு வீட்டுக்கே வந்து ரேஷன் பொருட்களை டெலிவரி செய்யும் தாயுமானவர் திட்டம் தொடங்கப்பட்டது.
வீடு தேடி சென்று வழங்கப்படும் ரேஷன் பொருட்கள்
இதனையடுத்து ஒவ்வொரு மாதமும் மூத்த குடிமக்களுக்கு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மார்ச் மாதத்துக்கான ரேஷன் பொருட்கள் விநியோகம் குறித்து ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் அந்தந்த மாவட்டங்களுக்கான தேதியை அறிவித்து வருகின்றனர். அதன்படி சென்னை மண்டலத்துக்கு ரேஷன் பொருட்கள் வீடு தேடிச் சென்று வழங்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மூத்த முடிமக்கள், மாற்றுத்திறனாளிகள்
இதுதொடர்பாக கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் சென்னை மண்டலம் சா.பாபு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. மார்ச் 2026 திங்களுக்கு 02.03.2026 மற்றும் 03.03.2026 ஆகிய 2 தினங்களில் சென்னையிலுள்ள அண்ணாநகர், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், தேனாம்பேட்டை, அடையார், திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் ஆகிய 15 மண்டலங்களில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் 990 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள், அத்தியாவசியப் பொருட்களை வீடு தேடி விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும்
இந்த தகவலை அனைத்து நியாய விலைக்கடைகளிலும் பொது மக்கள் அறியும் வகையில் தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தை தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

