23 மாவட்டங்களில் இன்று அடிச்சு ஊத்தப்போகும் கனமழை.. எங்கெல்லாம் தெரியுமா?
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாட்டில் வரும் நாட்களில் பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று 23 மாவட்டங்களில் மழை
தமிழ்நாட்டில் வரும் நாட்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இலங்கை கரையை நோக்கி நகர்ந்து கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, மாநிலத்தின் பல பகுதிகளில் வானிலை மாற்றம் காணப்படுவதாகவும், சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை மையம் தகவல்
வானிலை மையத்தின் தகவலின்படி, டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் பகுதிகளில் கன முதல் கனமழை பெய்யக்கூடும். இதேபோல், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட தமிழ்நாடு மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடலோர மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையற்ற வெளியே செல்வதை தவிர்க்கவும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கனமழை எச்சரிக்கை
மேலும், தமிழ்நாட்டின் மொத்தம் 23 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை இன்று பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி, நாமக்கல், சேலம், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒரு வாரத்துக்கும் இந்த மழை நிலை தொடரக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

