- Home
- Tamil Nadu News
- உருவாகிறதா புயல்? எந்தெந்த மாவட்டங்களில் ரவுண்ட் கட்டி மழை ஊத்தப்போகுது? டெல்டா வெதர்மேன் முக்கிய அப்டேட்
உருவாகிறதா புயல்? எந்தெந்த மாவட்டங்களில் ரவுண்ட் கட்டி மழை ஊத்தப்போகுது? டெல்டா வெதர்மேன் முக்கிய அப்டேட்
தென்மேற்கு வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பில்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, டெல்டா, வட மற்றும் தென் மாவட்டங்களில் ஜனவரி 13 வரை கன முதல் அதி கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

புயல் உருவாகிறதா
தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்மலம் மேலும் வலுப்பெறக்கூடும் என முன்பு கூறியிருந்த நிலையில் தற்போது அந்த அறிவிப்பை வானிலை மையம் திரும்ப பெற்றுள்ளது. நேற்று இரவு 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிலையில் தற்போது 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னைக்கு 800 கி.மீ., காரைக்காலுக்கு 630 கி.மீ., தொலைவில் நிலைக்கொண்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை
இதன் காரணமாக இன்று திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும். இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கனமழை குறித்து டெல்டா வெதர்மேன் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளார்.
டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர்
இதுதொடர்பாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள பதிவில்: தென்மேற்கு வங்ககடலில் நிலவக்கூடிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் வட இலங்கை கடல்பகுதியை அடையக்கூடும்.
அதிகனமழை எச்சரிக்கை
காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று இரவு முதல் 12ம் தேதி இரவு வரை பரவலாக விட்டு விட்டு கனமழை பதிவாகும். நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஒரிரு இடங்களில் ஜனவரி 10,11 ஆகிய தேதிகளில் அதித கனமழையாக 20 செ.மீ மழை பதிவாக வாய்ப்பு.
மிக கனமழை எச்சரிக்கை
வட மாவட்டங்களில் நாளை காலை முதல் மழை துவங்கி 12ம் தேதி வரை நீடிக்கக்கூடும். கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, #விழுப்புரம், புதுச்சேரி, இராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் பரவலாக விட்டு விட்டு கனமழையும், ஒரிரு இடங்களில் மிக கனமழையாக 12 செ.மீ முதல் 20 செ.மீ வரை மழை பதிவாக வாய்ப்புள்ளது.
தென் மாவட்டங்கள் & உள் மாவட்டங்கள்
உள் மாவட்டங்கள் & மேற்கு மாவட்டங்களில் ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் பரவலாக மழை எதிர்ப்பார்க்கலாம். தென் மாவட்டங்களில் ஜனவரி 12 மற்றும் 13 தேதிகளில் பரவலாக கனமழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி மலைப்பகுதிகளில் கனமழை ஜனவரி 12,13 தேதிகளில் பதிவாக வாய்ப்பு. குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும்.
விவசாயிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள்
அறுவடை செய்த தானியங்களை உடனடியாக பத்திரப்படுத்திவிட்டு, ஜனவரி 12ம் தேதி வரை அனைத்து வேளாண் பணிகளையும் ஒத்திவைப்பது நல்லது. குறிப்பாக திருவள்ளூர் முதல் தஞ்சாவூர் வரையிலான கடலோர மாவட்ட விவசாயிகள் அதித எச்சரிக்கை தேவை என அறிவுறுத்தியுள்ளார்.

