- Home
- Tamil Nadu News
- கூவாகம் திருவிழாவில் மிஸ் திருநங்கை 2025 அழகிப் போட்டி- முதலிடத்தை பிடித்தது யார்.?
கூவாகம் திருவிழாவில் மிஸ் திருநங்கை 2025 அழகிப் போட்டி- முதலிடத்தை பிடித்தது யார்.?
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவில் திருநங்கைகள் கலை விழா மற்றும் மிஸ் திருநங்கை - 2025 அழகிப் போட்டி நடைபெற்றது. பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் திருநங்கைகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா
உலகத்திலேயே திருநங்கைகளுக்கு என்றே தனியாக அமைந்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுத்தோறும் சித்திரை மாதத்தில் திருநங்கைகள் ஒன்று கூடி விழா எடுத்து கொண்டாடி வருகின்றனர்.
அதன்படி இந்த ஆண்டு கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
விழுப்புரத்தில் குவிந்த திருநங்கைகள்
விழுப்புரத்தில் குவிந்துள்ள திருநங்கைகளை உற்சாகப்படுத்தும் வகையில் தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் திருநங்கைகள் கலை விழா மற்றும் மிஸ் திருநங்கை வவிழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் அந்த வகையில் - திருநங்கைகளுக்கான அழகி போட்டி நேற்று இரவு நடைபெற்றது.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நடைபெற்ற இவ்விழாவில் பாட்டு, நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் ஏராளாமான திருங்கைகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். குறிப்பாக பாட்டு பாடியும், பரத நாட்டியம், கிராமிய நடனம் மற்றும் திரைப்பட பாடல்களுக்கு ஏற்ப நடமாடியும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தினர்.
மிஸ் திருநங்கை - 2025 - அழகிப்போட்டி
இதன்பின்னர் நடைப்பெற்ற 2025ஆம் ஆண்டிற்கான மிஸ் திருநங்கை அழகிப் போட்டியில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மும்பை போன்ற பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திருநங்கைகள் கலந்து கொண்டு விதவிதமான உடைகளை அணிந்து இசைக்கு ஏற்றபடி நளினத்துடன் ஒய்யாரமாக நடந்து வந்து பார்வையாளர்களை கவர்ந்தனர்.
இறுதியில் இந்த ஆண்டிற்கான மிஸ் திருநங்கையாக தூத்துக்குடியைச் சேர்ந்த சக்தி என்பவர் தேர்வு செய்யப்பட்டார். 2ம் இடம் சென்னையைச் சேர்ந்த ஜோதாவிற்கும் 3ம் இடம் சென்னையைச் சேர்ந்த திபாஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து இந்த ஆண்டின் மிஸ் திருநங்கையாக தேர்வு செய்யப்பட்ட மூவருக்கும் கிரீடம் அணிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
மிஸ் அழகியாக தூத்துக்குடி திருநங்கை
இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான கோயில் பூசாரிகளிடம் திருநங்கைகள் தாலி கட்டி திருமணம் செய்து கொள்ளும் நிகழ்ச்சி இன்றும் (12ஆம் தேதி), அதனைத்தொடர்ந்து மறுநாளான 14ஆம் தேதி கூத்தாண்டவர் தேரோட்டமும், திருநங்கைகள் கைப்பெண் கோலம் ஏற்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க இத்திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமின்றி பெங்களூர், கேரளா, கர்நாடகா, டில்லி, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் விழுப்புரத்தில் குவிந்துள்ளனர்.