- Home
- Tamil Nadu News
- 10 நிமிடத்திற்கு ஒருமுறை.. சென்னையே மாறப்போகுது.. மெட்ரோ பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்
10 நிமிடத்திற்கு ஒருமுறை.. சென்னையே மாறப்போகுது.. மெட்ரோ பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்
இந்த குறிப்பிட்ட மாற்றம் ஆனது ரயில் சேவை இடைவெளி குறையவும், வேகம் அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனுமதி கிடைத்தால் மெட்ரோ பயணிகளுக்கு இன்னும் வேகமான மற்றும் வசதியான சேவை கிடைக்கலாம்.

சென்னை மெட்ரோ அப்டேட்
சென்னையில் மெட்ரோ ரயில் வலையமைப்பை விரிவுபடுத்தும் பேஸ்–2 திட்டத்தின் காரிடார்–4 முக்கிய முன்னேற்றம் எட்டியுள்ளது. பூந்தமல்லி முதல் லைட்ஹவுஸ் வரை இணைக்கும் இந்த வழித்தடத்தில் உள்ள பூந்தமல்லி–வடபழனி (14.6 கிமீ) பகுதியின் செயல்பாட்டில் இருந்து சில கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட் (CMRL) தற்போது ரயில்வே பாதுகாப்பு ஆணையரிடம் கோரிக்கை வைத்துள்ளது. இந்த மாற்றங்கள் அமலுக்கு வந்தால் பயணிகளுக்கு மேலும் வசதி உள்ளது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
காரிடார் 4 மெட்ரோ
இந்த வழித்தடத்தில் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் ஏற்கனவே பல கட்ட ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். சமீபத்தில் ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் (CCRS) ஜனக் குமார் கார்க் நேரில் வந்து திட்டத்தின் கட்டமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். CMRL அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, சேவை இயக்கம் தொடர்பான அம்சங்களையும் அவர் பரிசீலித்தார். இது இந்த திட்டத்திற்கு மூன்றாவது முக்கிய ஆய்வாகும்.
பூந்தமல்லி வடபழனி மெட்ரோ
முன்னதாக நடைபெற்ற ஆய்வுகளின் போது பூந்தமல்லி–போரூர் மற்றும் போரூர்–வடபழனி ஆகிய பகுதிகளில் சில பாதுகாப்பு தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. அந்த குறைகளை சரிசெய்ய CMRL கூடுதல் பரிசோதனைகள் செய்து தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டன. பிப்ரவரி மாத இறுதியில் நடைபெற்ற இரண்டாவது ஆய்வுக்குப் பிறகு, அந்த வழித்தடத்தில் சேவை தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அதற்கு இரண்டு முக்கிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.
போரூர் மெட்ரோ பாதை
அதில் முதன்மையானது ரயில் இயக்க இடைவெளி. பூந்தமல்லி முதல் போரூர் வரை ரயில்கள் 15 நிமிடத்திற்கு ஒருமுறை மட்டுமே இயக்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் போரூர் முதல் வடபழனி வரை ரயில்களின் அதிகபட்ச வேகம் 25 கிமீ/மணி ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்த வேகக் கட்டுப்பாடு காரணமாக அந்த பகுதியிலும் ரயில்கள் சுமார் 20 நிமிட இடைவெளியில் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னை மெட்ரோ திட்டம்
தற்போது இந்த கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு CMRL அதிகாரிகள் CCRS-க்கு கோரிக்கை வைத்துள்ளனர். அனுமதி கிடைத்தால் பூந்தமல்லி–போரூர் இடையே ரயில்கள் 15 நிமிடத்திற்கு பதிலாக 10 நிமிடத்திற்கு ஒருமுறை இயக்கப்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் போரூர்–வடபழனி பகுதியில் ரயில் வேகம் 25 கிமீ/மணியில் இருந்து 40 கிமீ/மணியாக அதிகரிக்கலாம். இதற்கிடையில் காரிடார் முழுவதும் டெக் ஸ்லாப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிந்து இறுதி அனுமதி கிடைத்த பிறகு, பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் சேவை இடைவெளியையும் மேலும் குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

