- Home
- Tamil Nadu News
- கொத்தாக வரும் 3 நாள் தொடர் விடுமுறை... சொந்த ஊருக்கு ஜூட் விடும் பயணிகளுக்கு குட் நியூஸ் சொன்ன போக்குவரத்துக்கழகம்
கொத்தாக வரும் 3 நாள் தொடர் விடுமுறை... சொந்த ஊருக்கு ஜூட் விடும் பயணிகளுக்கு குட் நியூஸ் சொன்ன போக்குவரத்துக்கழகம்
Krishna Jayanthi Holiday : கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை ஒட்டி மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது.

கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை சிறப்பு பேருந்து
விடுமுறை நாட்கள் வந்தாலே சொந்த ஊர், சுற்றுலா தலங்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்கு செல்ல பொதுமக்கள் ஆர்வம் காட்டுவது வழக்கம். அந்த வகையில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தொடர்ந்து விடுமுறை வருவதால், தமிழகம் முழுவதும் சொந்த ஊர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, கூடுதல் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் திட்டமிட்டுள்ளன.
கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு முக்கிய நகரங்களுக்கும், பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Women Free Bus Travel: பெண்களுக்கு இலவச பயணம்.! எந்த பேருந்துகளில் கட்டணம் கிடையாது?
கிளாம்பாக்கத்தில் இருந்து கூடுதல் பேருந்துகள்
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, கும்பகோணம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில், ஈரோடு, தூத்துக்குடி, சேலம், திருப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. செப்டம்பர் 3ஆம் தேதி 910 பேருந்துகளும், செப்டம்பர் 4ஆம் தேதி 740 பேருந்துகளும், செப்டம்பர் 5ஆம் தேதி 880 பேருந்துகளும் கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் இருந்தும் சிறப்பு பேருந்துகள்
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், ஓசூர் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. செப்டம்பர் 3ஆம் தேதி 210 சிறப்பு பேருந்துகளும், செப்டம்பர் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் தலா 115 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, பெங்களூரு, ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் பயணிகளின் தேவைக்கேற்ப பல்வேறு பகுதிகளுக்கு சுமார் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மாதவரத்திலிருந்தும் கூடுதல் சேவை
மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கும்பகோணம், திருச்சி, ஓசூர், வேலூர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் 95 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
திரும்பும் பயணிகளுக்கும் ஏற்பாடு
விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்பும் பயணிகளின் வசதியையும் கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அனைத்து முக்கிய இடங்களிலிருந்தும் சிறப்பு சேவைகள் ஏற்பாடு செய்யப்படும் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏற்கனவே ஆயிரக்கணக்கான பயணிகள் பேருந்து பயணத்திற்காக முன்பதிவு செய்துள்ளனர். மேலும் முன்பதிவு எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க தொலைதூர பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பயணிகள் ஆன்லைன் முன்பதிவு வசதி அல்லது TNSTC மொபைல் செயலி மூலம் தங்களது பயணத்திற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
