- Home
- Tamil Nadu News
- AIADMK: அடுத்தவரை காலி பண்ண நினைக்காதீங்க! அதிகாரம் கையில் இருப்பதால் ஓவராக ஆட்டம் போடாதீங்க இபிஎஸ்! பூங்குன்றன் எச்சரிக்கை!
AIADMK: அடுத்தவரை காலி பண்ண நினைக்காதீங்க! அதிகாரம் கையில் இருப்பதால் ஓவராக ஆட்டம் போடாதீங்க இபிஎஸ்! பூங்குன்றன் எச்சரிக்கை!
Edappadi Palanisamy: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், அதிமுகவில் நடக்கும் நீக்கங்கள் குறித்து முகநூலில் பதிவிட்டுள்ளார். அதிகாரம் கையில் இருக்கிறது என்று ஆட்டம் போட வேண்டாம். மனிதரின் நல்ல நேரம் தொடங்கும் இடத்தில் ஆரம்பிக்கும்.

அதிமுகவில் முக்கிய பிரமுகர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கி வரும் நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளான பூங்குன்றன் முகநூல் பக்கத்தில் பரபரப்பு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் என் வாழ்க்கையிலும், என் பணியிலும் எத்தனையோ மனிதர்களையும், பல்வேறு அதிகார மையங்களையும் நெருக்கத்திலிருந்து பார்த்திருக்கிறேன். அந்த அனுபவங்கள் எனக்குக் கற்றுக்கொடுத்த பாடங்கள் சாதாரணமானவை அல்ல; அவை வாழ்க்கையின் மிக ஆழமான உண்மைகள். நான் புரட்சித்தலைவி அம்மா அவர்களுடன் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில், தினந்தோறும் ஏராளமான மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர்களில் பெரும்பாலோர் யாரைப் பற்றியாவது புகார் பட்டியலோடுதான் வருவார்கள். "அவர் அதைச் செய்யவில்லை, இந்தச் செயலாளர் சரியில்லை..." என்று அடுத்தவர்களைக் குறை சொல்வதிலேயே அவர்களின் நேரம் கரையும்.
அப்படி வருகிறவர்களிடம் நான் முகத்திற்கு நேராகவே சொல்லிவிடுவதுண்டு. "சின்னப் பிள்ளை மாதிரி எப்போதும் புகார் கொடுத்துக்கொண்டே இருக்காதீர்கள். அடுத்தவர் செய்யவில்லை என்று அசிங்கமாகப் பேசுவதை விட, இந்த பதவியை எனக்குக் கொடுங்கள்; நான் மிகச் சிறப்பாகச் செய்து காட்டுகிறேன்' என்று உரிமையோடு கேளுங்கள்." அடுத்தவரைத் தாழ்த்திப் பேசுவதை விட, தன் திறமை மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பைக் கேட்பதே ஒரு உண்மையான உழைப்பாளியின் அடையாளம் என்பதை நான் எப்போதும் வலியுறுத்துவேன்.
அரசியல் களத்தில் சில மாவட்டச் செயலாளர்கள் அல்லது பொறுப்பாளர்கள், தங்களுக்குப் பிடிக்காதவர்களையும், செல்வாக்குமிக்க திறமையாளர்களையும் ஓரங்கட்ட நினைப்பார்கள். ஒருவரின் பதவியைப் பறித்துத் தனக்குப் பிடித்தவருக்குக் கொடுப்பார்கள். ஆனால், அப்படிப் பதவி பறிக்கப்பட்டவர்கள் அமைதியாகவே இருப்பார்கள். உண்மையில், அந்த அமைதிக்குப் பின்னால் ஒரு பெரும் சக்தி இருக்கும். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், அதிகாரம் கையில் இருக்கிறது என்று ஆடுபவர்களிடம் நான் சொல்வது உண்டு..!
"உங்களுக்கு இப்போது நல்ல நேரம் இருக்கிறது என்பதற்காக அடுத்தவரைக் காலி செய்ய நினைக்கிறீர்கள். ஆனால், உங்களால் யாரையும் அழித்துவிட முடியாது. நாளை அவருக்கு நல்ல நேரம் வரும்போது, அவர் உங்களைப் பழிவாங்கும் அளவுக்கு நீங்கள் நடந்துகொள்ளாதீர்கள். உங்கள் வீழ்ச்சி என்பது, நீங்கள் ஒதுக்கிய மனிதரின் நல்ல நேரம் ஆரம்பிக்கும் இடத்தில் தான் தொடங்குகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்." நான் சொன்ன இந்த ஆழமான உண்மையைப் புரிந்து கொண்டு, தங்களைத் திருத்திக் கொண்ட மனிதர்களும் உண்டு. நாம் வாழ்ந்து கொண்டிருப்பதும், அதிகாரத்தில் இருப்பதும் வெறும் நம் தனிப்பட்ட திறமையால் மட்டுமே அல்ல; நமக்கான 'நேரத்தால்' தான். அந்த நேரத்தைக் கொடுப்பது இறைவனின் பெருங்கருணை. இதை உணர்வதற்குப் பெரிய இறை நம்பிக்கையும், மன அடக்கமும் தேவை.
அதிகாரமும் பதவியும் நிரந்தரமல்ல; ஆனால் நாம் நடக்கும் வழியும், மனிதர்களை நடத்தும் விதமுமே நிலைத்து நிற்கும். புகார்களைப் புறந்தள்ளி உழைப்பதும், கையில் அதிகாரம் இருக்கும்போது பணிவோடு இருப்பதும் தான் வாழ்க்கையின் உண்மையான முதிர்ச்சி. காலத்தின் கணக்கை அறிந்து வாழ்பவர்களை எந்த வீழ்ச்சியும் அசைக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

