- Home
- Tamil Nadu News
- “மோடிக்கும் ED-க்கும் பயப்படவில்லை” அப்புறம் ஏன் உதயநிதியின் கூட்டாளிகள் தலைமறைவு.? நயினார் நாகேந்திரன்
“மோடிக்கும் ED-க்கும் பயப்படவில்லை” அப்புறம் ஏன் உதயநிதியின் கூட்டாளிகள் தலைமறைவு.? நயினார் நாகேந்திரன்
துணை முதல்வர் உதயநிதியின் “மோடிக்கும் பயமில்லை, ED-க்கும் பயமில்லை” என்ற கூற்றிற்கு பதிலடி கொடுத்துள்ளார் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன். உதயநிதியின் கூட்டாளிகள் தலைமறைவாக இருப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

“மோடிக்கும் பயமில்லை, ED-க்கும் பயமில்லை”
அமலாக்கத்துறை தமிழகத்தில் தொடர்ந்து பல இடங்களில் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், துணை முதலமைச்சர் உயநிதி ஸ்டாலின் “மோடிக்கும் பயமில்லை, ED-க்கும் பயமில்லை” என தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில்,
மோடிக்கும் பயமில்லை, ED-க்கும் பயமில்லை” என்று வழக்கம் போல எதுகை மோனையில் வீரவசனம் பேசிவிட்டு தப்பிவிடலாம் என்று நினைக்கிறார் உதயநிதி ஸ்டாலின், தவறு ஏதும் செய்யவில்லை என்றால், வழியில் ஏதும் பயமில்லை என்றால், எதற்காக உதயநிதி அவர்களின் கூட்டாளிகளான ரத்தீஷும், ஆகாஷ் பாஸ்கரனும் இன்று வரை தலைமறைவாக உள்ளார்கள் என்று அவர் விளக்கம் கொடுப்பாரா?
திமுகவை மிரட்டிய காங்கிரஸ் ஆட்சி
மார்ச் 2011-ல் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான சீட்டுப் பேரத்தின் போது, CBI கோபாலபுரத்து வீட்டின் மேல் மாடியில் சோதனை செய்ய, கீழே பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட நிகழ்வுக்கு செல்வோமா? அன்று பயம் காட்டி பேரம் செய்தது அம்மையார் சோனியா காந்தி அவர்களின் வழிகாட்டுதலில் இயங்கிய காங்கிரஸ் அரசாங்கம் தான், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களோ, பாஜக-வோ அல்ல! அன்று அரண்டு போன திமுக தலைவர்கள், இன்று வரை தங்களுக்கு எதிராக நடக்கும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எல்லாம் மிரட்டுவதற்கு செய்யும் அரசியல் என்றே தொடர்ச்சியாக தவறாக தோற்றம் கொடுத்து வருகிறார்கள்.
சீட்டுக்கு பேரம் பேசி தொகுதிகளை பெற்ற காங்கிரஸ்
அதற்குக் காரணம், கழுத்தில் கால் வைத்தபடி சீட்டு பேரம் பேசி தொகுதிகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சியின் மேலுள்ள அச்சத்திலிருந்து இன்னும் திமுக விடைபெறவில்லை என்றே தெரிகிறது. அன்று உதயநிதி அவர்கள் அரசியலில் நுழையவில்லை என்றாலும், அந்த வரலாறு அவரை இன்னும் சுடுகிறது போல.
கேள்வி, நீங்கள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு பயப்படுகிறீர்களா என்பது அல்ல! அவர் என்றுமே அரசியல் காழ்ப்புகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட உலகத் தலைவர்!
நீங்கள் நீதிக்கு பயப்படுகிறீர்களா.?
நாட்டைக் காப்பதையும், வளர்ச்சிப் பாதையில் வழிநடத்துவதையும், நம் பழம்பெரும் நாகரிகத்தை மீட்டெடுப்பதையும் மட்டுமே உயிர் மூச்சாக நினைத்துச் செயல்பட்டு வரும் உன்னதத் தலைவர்! அப்படிப்பட்ட நிலையில், திமுகவை பிரதமர் அச்சுறுத்தப் பார்க்கிறார் என்பதெல்லாம் நகைப்புக்குரிய சுயவிளம்பரம் மட்டுமே…
ஆக, உண்மையான கேள்வி என்னவென்றால் - நீங்கள் நீதிக்கு பயப்படுகிறீர்களா என்பது தான்! அந்த நீதியானது நிச்சயம் இறுதியில் உங்கள் எண்ணத்தை எல்லாம் தூளாக்கி, திமுகவுக்குத் தக்கப் பாடம் கற்பிக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை என கூறியுள்ளார்.