- Home
- Tamil Nadu News
- தமிழகம் முழுவதும் இன்று டமால் டுமீல்! சென்னையிலும் தரமான சம்பவம் இருக்காம்.. பிரதீப் ஜான் சொன்ன முக்கிய அப்டேட்
தமிழகம் முழுவதும் இன்று டமால் டுமீல்! சென்னையிலும் தரமான சம்பவம் இருக்காம்.. பிரதீப் ஜான் சொன்ன முக்கிய அப்டேட்
தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்துள்ள நிலையில், இன்றும் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வெதர்மேன் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று வேலூர், விழுப்புரம், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விருதுநகர், தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல் நாளை தென்தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விருதுநகர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது. இந்நிலையில் மழை குறித்து பிரதீப்ஜான் முக்கிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: இன்று மேற்கு, வட தமிழ்நாடு மற்றும் டெல்டா மாவட்டங்களில் “டமால் டுமேல்” மழை வாய்ப்பு உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு வட கடலோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
நேற்று மாநிலம் முழுவதும் பரவலான மற்றும் குறிப்பிடத்தக்க இடியுடன் கூடிய மழைப்பொழிவு காணப்பட்டது: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளுக்கு அருகே கனமழை பெய்தது. வேலூர் மற்றும் ராணிப்பேட்டை போன்ற வட உள் மாவட்டங்களில் நல்ல மழைப்பொழிவு பதிவானதாக குறிப்பிட்டுள்ளார். பெரம்பலூர் மற்றும் திருச்சி மாவட்டங்கள் உள்ளிட்ட டெல்டா உள் மாவட்டங்களில் எதிர்பாராத மழையும் பெய்ததாக தெரிவித்துள்ளார்.
இன்று மீண்டும் பெரும்பாலான மாவட்டங்களில் மற்றொரு வெப்பமான நாளாக இருக்கும். சென்னை உள்பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கும். மழை பெய்தாலும் மதுரை மீண்டும் அதிக வெப்பத்தை பதிவு செய்யலாம். திருச்சி மற்றும் கரூர் அதிக வெப்பத்திற்கான போட்டியில் இருக்கும். தேனி, வால்பாறை, கொடைக்கானல், விருதுநகர், நீலகிரி ஆகிய பகுதிகளில் தனித்த இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மழைகள் குறுகிய நேரம் மட்டுமே பெய்யும், ஆனால் சில இடங்களில் மிகவும் பலமாக இருக்கும். அருகிலுள்ள பகுதிகளில் மழை இல்லாமல் போகவும் வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.

