- Home
- Tamil Nadu News
- மூன்று மாவட்டங்களில் முரட்டு தனமாக ஊத்தப்போகும் மழை.. அப்படினா.. சென்னையின் நிலவரம் என்ன?
மூன்று மாவட்டங்களில் முரட்டு தனமாக ஊத்தப்போகும் மழை.. அப்படினா.. சென்னையின் நிலவரம் என்ன?
தமிழகத்தில் நிலவிய வெப்பத்திற்கு மத்தியில், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று பெரம்பலூர், அரியலூர், திருச்சி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

நேற்று வெளுத்து வாங்கிய கனமழை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் சுட்டெரித்து வந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். பகலில் நேரங்களில் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வந்தனர். இந்நிலையில் நேற்று சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவி வரும் நிலையில் மழை குறித்து வானிலை மையம் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளது.
இன்று 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
மன்னார் வளைகுடா முதல் தெற்கு உள் கர்நாடகா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பெரம்பலூர், அரியலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இடி மின்னலுடன் கூடிய கனமழை
அதேபோல் நாளை கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மார்ச் 21ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசான மழை பெய்யக்கூடும்.
தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
மார்ச் 22 முதல் மார்ச் 24 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது.
சென்னையில் கனமழை எச்சரிக்கை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

