- Home
- Tamil Nadu News
- அடுத்தடுத்து 4 நாட்கள் விடுமுறை.! பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை!
அடுத்தடுத்து 4 நாட்கள் விடுமுறை.! பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை!
Holiday Special Bus: தெலுங்கு வருட பிறப்பு, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வரும் 4 நாட்கள் தொடர் விடுமுறையை ஒட்டி, அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது.

4 நாட்கள் விடுமுறை
விடுமுறை என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரே கொண்டாட்டம் தான். அதுவும் தொடர் விடுமுறை என்றால் சொல்லவா வேண்டும். அந்த வகையில் தெலுங்கு வருட பிறப்பு, ரம்ஜான் பண்டிகை மற்றும் வார விடுமுறை என 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க உள்ளது. இந்நிலையில் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் சிரமமின்றி செல்ல சிறப்பு பேருந்துகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரசு விரைவுப் போக்குவரத்து கழகம்
இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: இன்று, நாளை (வியாழக்கிழமை தெலுங்கு வருட பிறப்பு) மார்ச் 20 (வெள்ளிக் கிழமை) மார்ச் 21 (சனிக்கிழமை ரம்ஜான் பண்டிகை), மார்ச் 22 (ஞாயிற்றுக் கிழமை) தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று மற்றும் நாளை ஆகிய நாட்களில் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், குமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (புதன் கிழமை) 450 பேருந்துகளும் நாளை (வியாழக் கிழமை) 345 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 100 பேருந்துகளும், நாளை (வியாழக்கிழமை) 90 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாதவாரம் பேருந்து நிலையம்
மாதாவரத்திலிருந்து இன்று மற்றும் நாளை ஆகிய நாட்களுக்கு 24 சிறப்பு பேருந்துகளும் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் மார்ச் 22 (ஞாயிறு) அன்று 565 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
பயணிகள் முன்பதிவு செய்ய அறிவுறுத்தல்
இந்நிலையில்,புதன் கிழமை அன்று 22,768 பயணிகளும், வியாழக்கிழமை அன்று 6,034 பயணிகளும் வெள்ளிக்கிழமை அன்று 8,575 பயணிகளும் சனிக்கிழமை அன்று 4,139 பயணிகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று 19,888 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

