- Home
- Tamil Nadu News
- 300 சவரன் நகை! ரூ.70 லட்சத்தில் கார்! திருமணமான 78 நாட்களில்! வாட்ஸ் அப் ஆடியோவில் அதிர்ச்சி! நடந்தது என்ன?
300 சவரன் நகை! ரூ.70 லட்சத்தில் கார்! திருமணமான 78 நாட்களில்! வாட்ஸ் அப் ஆடியோவில் அதிர்ச்சி! நடந்தது என்ன?
திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் அண்ணாதுரையின் மகள் ரிதன்யா, திருமணமான 78 நாட்களில் தற்கொலை செய்துகொண்டார்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி கைகாட்டிபுதூரை சேர்ந்தவர் அண்ணாதுரை. தொழில் அதிபரான இவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் ஈரோடு இடைத்தேர்தலில் இந்து திராவிட மக்கள் கட்சியின் சார்பில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்டவர். இவரது மகள் ரிதன்யா (27). இவருக்கும் திருப்பூர் வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த கவின் குமார்(28) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் போது பெண்ணின் வீட்டில் 100 சவரன் நகை, 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான வால்வோ கார் மற்றும் 2 1/2 கோடி ரூபாய் செலவு செய்து திருமணம் செய்து வைத்தார்.
அன்று முதலே தனது கணவர் கவின்குமார் உடல் ரீதியாகவும், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் மன ரீதியாகவும் சித்திரவதை செய்வதாகவும் இனி இந்த வாழ்க்கை வேண்டாம் என்று தந்தையிடம் மகள் பலமுறை கூறியுள்ளார். ஆனால், பெற்றோர் தன் மகள் ரிதன்யாவை சமாதானப்படுத்தி சில நாட்களில் எல்லாம் சரியாகி விடும் கவலைப்படாதே என்று ஆறுதல் கூறினர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ரிதன்யா சேவூர் அருகே தாளக்கரையில் உள்ள லட்சுமிநரசிம்மர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய காரில் வழக்கம்போல் சென்றார். காரை அவரே ஓட்டினார். பின்னர் தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மாத்திரையை உட்கொண்டு காரிலேயே வாயில் நுரை தள்ளியபடி மூச்சு பேச்சு இல்லாமல் ரிதன்யா மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காரை திறந்து பார்த்த போது ரிதன்யா உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் பெண் வீட்டார் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தனர். திருமணத்தின் போது வரதட்சணையாக பெண்ணின் வீட்டில் 500 பவுன் நகை தருவதாக கூறி 300 பவுன் நகை போட்டுள்ளனர். மாமனாரும், மாமியாரும் ரிதன்யாவிடம் மீதமுள்ள 200 பவுன் நகை இன்னும் தரவில்லை என்று கூறி சித்ரவதை செய்து வந்துள்ளனர். மேலும் தாலி கட்டிய கணவரும் டார்ச்சர் செய்து வந்துள்ளார். இதனால் பொறுமை இழந்த ரிதன்யா உடல் மற்றும் மன ரீதியாக சித்ரவதை அனுபவித்து வந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.
இதனிடையே ரிதன்யா விஷ மாத்திரையை உட்கொள்வதற்கு முன்பாக தனது தந்தையின் வாட்ஸ் அஃப் எண்ணிற்கு உருக்கமாக ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் என்னோட முடிவுக்கு என்னுடைய திருமண வாழ்க்கைத்தான் காரணம். என் கணவரும் அவரது குடும்பத்தினரும்தான் காரணம். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்ரவதை அனுபவிச்சுட்டே. போதும் இந்த லைஃப் எனக்கு வேணாம். அவங்க மாறமாட்டாங்க. என்னோட இந்த முடிவிற்கு கவின், ஈஸ்வரமூர்த்தி, சித்ராதேவி தான் காரணம். என்னை மன்னிச்சுடுங்க அப்பா.. என்னை மன்னிச்சுடுங்க அம்மா. என கண்ணீர் மல்க பேசியிருந்தார். இதனையடுத்து கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். திருமணம் ஆகி 78 நாட்களிலேயே புதுப்பெண் உயிரிழந்ததை அடுத்து ஆர்டிஓ விசாரணை நடைபெற்று வருகிறது.