சென்னையில் இரட்டை கொ*லை.. போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்
இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக பல்லாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரவுடி ஆறுமுகம்
சென்னை தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (20). இவர் மீது கொலை, கொள்ளை அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியே வந்த நிலையில் திரிசூலம் பகுதியில் நண்பர் வீட்டில் தங்கியிருந்தார். அவருடன் 17 வயது சிறுவனும் தங்கியிருந்தார்.
இரட்டை கொலை
இந்நிலையில் ஆறுமுகம் வழக்கம் போல் மது அருந்தி விட்டு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டிற்குள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த மர்ம நபர்கள் ஆறுமுகம், அவருடன் இருந்த சிறுவன் சதீஷ் இருவரையும் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பித்தனர். இவர்கள் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தனர்.
பல்லாவரம் போலீஸ் விசாரணை
இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக பல்லாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த இரட்டை கொலை நடைபெற்றது தெரியவந்தது.
சிசிடிவி காட்சிகள் ஆய்வு
இதனிடையே கொலை நடந்த இடத்தில் தாம்பரம் காவல் ஆணையர் அமுல் ராஜ் ஆய்வு மேற்கொண்டனர். கொலை நடந்த பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய குற்றவாளிகளை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரட்டைக் கொலை வழக்கில் 8 பேரை கைது செய்த தனிப்படை போலீசார் முக்கிய குற்றவாளி தீபக்கை தேடிவருகின்றனர்.

