- Home
- Tamil Nadu News
- திமுகவில் சர்ப்ரைஸ்.. அதிமுகவில் பாமகவுக்கு வாய்ப்பு.. ராஜ்ய சபா வேட்பாளர்கள் லிஸ்ட் இதோ!
திமுகவில் சர்ப்ரைஸ்.. அதிமுகவில் பாமகவுக்கு வாய்ப்பு.. ராஜ்ய சபா வேட்பாளர்கள் லிஸ்ட் இதோ!
திமுகவும், அதிமுகவும் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

திமுக, அதிமுக ராஜ்யசபா வேட்பாளர்கள்
திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் ராஜ்யசபா வேட்பாளர்களை அறிவித்துள்ளன. திமுகவில் மொத்தம் 4 இடங்கள் உள்ளன. இதில் கூட்டணி கட்சிகளான காங்கிரசுக்கு ஒரு இடமும், தேமுதிகவுக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 2 இடங்களில் திருச்சி சிவாவும், கான்ஸ்டன்டைன் ரவீந்திரனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதே வேளையில் திமுக செய்தித் தொடர்பாளர் மற்றும் முரசொலி நாளிதழின் ஆங்கிலப் பதிப்பான 'The Rising Sun' ஆசிரியருமான கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் புது முகமாக வந்துள்ளார்.
திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பு
இது தொடர்பாக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், '2026 மார்ச் 16 அன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கான 4 இடங்களில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடமும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மீதமுள்ள 2 இடங்களில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களாக திருச்சி சிவா, எம்.பி.எஸ், பேராசிரியர்.ஜே.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், எப்இ., எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.எல், பி.எச்டி ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்படுகிறது' என்று கூறப்பட்டுள்ளது.
அதிமுகவில் பாமகவுக்கு ஒரு இடம்
இதேபோல் அதிமுகவுக்கு 2 மாநிலங்களவை இடங்கள் உள்ளன. இதில் ஒரு இடம் பாமவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற ஒரு இடத்தில் அதிமுகவின் மூத்த தலைவர் தம்பிதுரை அறிவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடியின்படி, 16.3.2026 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறப்பட்டுள்ளது.
