- Home
- Tamil Nadu News
- தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக கவுன்சிலர் நீக்கம்.. இதுதான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்
தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக கவுன்சிலர் நீக்கம்.. இதுதான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்
DMK: விமான பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட திருவள்ளூர் நகர்மன்ற உறுப்பினருமான கு.பிரபாகரன் கழகக் கட்டுப்பாட்டை மீறியதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

திமுக கவுன்சிலர் நீக்கம்
திருவள்ளூர் 6வது வார்டு திமுக கவுன்சிலரும், மாணவர் அணி துணை அமைப்பாளருமான பிரபாகரன் அக்கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டு அறிவிப்பில்: திருவள்ளூர் மேற்கு மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளரும் திருவள்ளூர் நகர்மன்ற உறுப்பினருமான கு.பிரபாகரன் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி ( Suspension ) வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையம்
இதற்கான காரணம் வெளியாகியுள்ளது. அதாவது திருவள்ளூர் நகராட்சியில் 6-வது வார்டு திமுக கவுன்சிலராக இருந்து வருபவர் பிரபாகரன்(36). இவர் கடந்த 25-ம் தேதி தனது நண்பர் தியாகு (36) என்பவருடன் சென்னை விமான நிலையத்தில் இருந்து இண்டிகோ விமானத்தில் டெல்லி சென்றார்.
பணிப்பெண்ணிடம் பாலியல் சீண்டல்
அப்போது விமானத்தில் பணியில் இருந்த 25 வயது பணிப்பெண்ணிடம் மதுபோதையில் இருந்த கவுன்சிலர் பிரபாகரன் மற்றும் அவரது நண்பர் தியாகு இருவரும் நீ எந்த ஊர்? என்று கேட்டுள்ளனர். அவர் மதுரை என கூறியபோது மதுரையில் ஆண்டிப்பட்டியா, கல்லுப்பட்டியா? என்று கூறி கிண்டல் அடித்துள்ளனர். மேலும் ஒருமையில் அழைத்தது மட்டுமல்லாமல் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
திமுக கவுன்சிலர் கைது
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட விமான பணிப்பெண் மீனம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து 2 பேரையும் விசாரணைக்கு ஆஜராகும் படி போலீசார் உத்தரவிட்டனர். ஆனால் ஆஜராகவில்லை. இந்நிலையில் திமுக கவுன்சிலர் பிரபாகரன் மற்றும் தியாகு நேற்று முன்தினம் மாலை டெல்லியில் இருந்து இண்டிகோ விமானத்தில் சென்னை திரும்பிய போது விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். இந்த இருவர் மீதும் போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தல் நேரத்தில் திமுக பிரமுகர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

