- Home
- Tamil Nadu News
- சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மாணவர்கள்.! பள்ளி அதிகாரிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு
சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மாணவர்கள்.! பள்ளி அதிகாரிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு
தமிழக அரசின் காலை உணவுத் திட்டம் மாணவர்களின் ஊட்டச்சத்து, கல்வி ஆர்வம், மற்றும் பள்ளி வருகையை அதிகரித்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

மாணவர்களின் கல்வி திட்டங்கள்
கல்வி தான் மாணவர்களின் வாழ்க்கையில் அடித்தளமாக உள்ளது. மாணவர்களின் அறிவு, திறன், மற்றும் எதிர்காலத்தை வடிவமைக்கும் முக்கிய கருவியாக கல்வி உள்ளது. இது மாணவர்களுக்கு புரிதல், பகுப்பாய்வு, மற்றும் சுயமாக சிந்திக்கும் திறனை வழங்குகிறது. கற்றல் மூலம் மாணவர்கள் தங்கள் திறமைகளை அறிந்து தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்கின்றனர். தரமான கல்வி மாணவர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது.
எனவே மாணவர்களுக்காக பல்வேறு திடங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. கல்வி உதவித்தொகை, இலவச புத்தகம், இலவச பேருந்து பயணம், இலவச மிதிவண்டி என பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இது மட்டுமில்லாமல் ஏற்கனவே மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில் காலை உணவு திட்டமும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தால் ஏழை, எளிய மாணவர்கள் பயன் பெற்று வருகிறார்கள்.
பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்
தமிழகத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தமிழ்நாடு அரசால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சத்தான காலை உணவு வழங்குவதற்காக திட்டம் கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் மாணவர்கள் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய வாய்ப்பு ஏற்படுகிறது. மேலும் ஊட்டச்சத்து குறைபாடு, குறிப்பாக இரத்த சோகை போன்றவை தடுக்கப்படுகிறது. மேலும் இடைநிற்றல் குறைந்து மாணவர்களின் பள்ளி வருகை மற்றும் தக்கவைப்பு விகிதங்களை அதிகரித்துள்ளது.
காலை உணவு திட்டத்தால் மாணவர்களின் பள்ளி வருகை 30% அதிகரித்துள்ளது. மேலும் மாணவர்களின் ஊட்டச்சத்து மற்றும் கல்வி ஆர்வம் மேம்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. காலை உணவு திட்டமானது முதற்கட்டமாக 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று 1,545 பள்ளிகளில் 1,14,095 மாணவர்களுக்கு தொடங்கப்பட்டது. இதனையடுத்து 31,008 அரசு தொடக்கப் பள்ளிகளில் 18.5 லட்சம் மாணவர்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது.
மாணவர்களுக்கான உணவுகள்
ஒவ்வொரு மாணவருக்கும் தினமும் 50 கிராம் மூலப்பொருட்கள் கொண்ட உணவுகள் வழங்கப்படுகிறது. உப்புமா, கிச்சடி, பொங்கல், சிறுதானிய உணவுகள், காய்கறி சாம்பார், இனிப்பு (வெள்ளிக்கிழமை) ஆகியவை வழங்கப்படுகின்றன. இது மட்டுமில்லாமல் வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்கள் உள்ளூர் சிறுதானியங்கள் மாணவர்களின் சத்திற்காக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்காக 2024-25 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காலை உணவு திட்டத்தில் மாணவர்கள் பயன்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என தொடக்ககல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புறங்களில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து குழந்தைகளும் காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் பயன்பெறுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும், பள்ளிகள் ஏதேனும் விடுபட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களே முழு பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் நரேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கல்வி அலுவலர்களே முழு பொறுப்பு
இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், இந்த கல்வி ஆண்டு முதல் நகர்ப்புறங்களில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் காலை சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இதனை அனைத்து பள்ளிகளை சேர்ந்த குழந்தைகளும் பயன்பெறுகிறார்களா என்பதை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என்றும்,
பள்ளிகள் ஏதேனும் விடுபட்டு இருந்தால் அது குறித்த தகவல்களை உடனடியாக இயக்குனர் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். பள்ளிகள் ஏதேனும் விடுபட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களே முழு பொறுப்பை ஏற்க நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.