- Home
- Tamil Nadu News
- சென்னையில் உயிரிழந்து கிடந்த காகங்கள்! பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி! பொதுமக்களுக்கு அலர்ட்!
சென்னையில் உயிரிழந்து கிடந்த காகங்கள்! பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி! பொதுமக்களுக்கு அலர்ட்!
சென்னையின் பல்வேறு பகுதிகளில் காகங்கள் மர்மமான முறையில் உயிரிழந்தன. பரிசோதனையில் அவற்றின் இறப்புக்கு எச்5என்1 பறவைக் காய்ச்சலே காரணம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

காகங்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு
பீகார் மாநிலத்தில் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள நவ்காச்சியாவில் கடந்த 11ம் தேதி நூற்றுக்கும் மேற்பட்ட காகங்கள் கொத்து கொத்தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து உயிரிழந்த காகங்களின் உடல்களை எடுத்து சென்று பரிசோதனைக்காக ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் தமிழகத்திலும் காகங்கள் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பரிசோதனையில் அதிர்ச்சி
அதாவது சென்னை அடையார், காந்தி நகர், பள்ளிக்கரணை, வேளச்சேரி, திருவான்மியூர், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓஎம்ஆர் சாலை உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து காகங்கள் தொடர்ந்து உயிரிழந்தன. இதனையடுத்து உயிரிழந்த காகங்களின் மாதிரிகளை காஞ்சிபுரத்தில் உள்ள கால்நடை நோய்த் தடுப்பு புலனாய்வுக் குழுவினர், கடந்த மாதத்தில் சேகரித்து போபாலில் உள்ள தேசிய விலங்கள் நோய் கட்டுபாட்டு ஆய்வு நிறுவனத்திற்கு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பரிசோதனைகளின் முடிவுகள் தற்போது வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி
அதில், சென்னை அடையாறு பகுதியில் உயிரிழந்த காகங்களின் மாதிரிகள் கடந்த ஜனவரி 21ம் தேதி எங்கள் மையத்திற்கு தமிழக அரசால் அனுப்பி வைக்கப்பட்டது. இதை பரிசோதனை செய்தபோது, எச்5என்1 ஏவியன் இன்ஃப்ளூயன்சா என்ற பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு கோழிகள், மற்ற பறவைகள், மனிதர்கள் உள்ளிட்டோருக்கும் பரவும் தன்மை கொண்டது. அனைத்து ஊராட்சிகள், நகர்ப்புற பகுதிகளிலும் வைரஸ், தொற்று பரவலைத் தடுக்க தீவிர கண்காணிக்க வேண்டியது அவசியமாகும். பறவை காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவ வாய்ப்பு இருப்பதால், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளருக்கு, மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
பறவைகள் உயிரிழந்தால் என்ன செய்ய வேண்டும்?
* உங்கள் பகுதிகளில் திடீரென இறக்கும் பறவைகள் குறித்து கால்நடை பராமரிப்பு துறைக்கு மக்கள் தகவல் அளிக்க வேண்டு.
* திடீரென பறவைகளோ, விலங்குகளோ உயிரிழந்து கிடந்தால் அதை வெறும் கையால் தொட வேண்டாம்.
* பறவைகள் இறந்தால் முறையாக அப்புறப்படுத்த ஆழமாக குழி தோண்டி அந்த பறவையை புதைக்க வேண்டும்.
* கோழி பண்ணைகளுக்குள் வெளி நபர்களை அனுமதிக்கக்கூடாது.
* ஒரு கோழிப் பண்ணையில் வேலை செய்பவர் பல பண்ணைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
* பிற மாநிலங்களில் இருந்து கோழிகளையோ கோழி இறைச்சியையோ கொண்டுவரக்கூடாது.
* தமிழக எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

