நயன்தாராவை சீண்டிய சி.வி.சண்முகம்.. களத்தில் குதித்த கனிமொழி.. நடந்தது என்ன?
நடிகை நயன்தாரா குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தரக்குறைவாக பேசியது சர்ச்சையாகியுள்ளது. இதற்கு கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். என்ன நடந்தது? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

நயன்தாரா குறித்து சர்ச்சையாக பேசிய சி.வி.சண்முகம்
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (மார்ச் 17) நடைபெற்றது. இதேபோல் விழுப்புரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய சி.வி. சண்முகம் நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சையாக பேசியது பெரும் கண்டனத்துக்கு வழிவகுத்துள்ளது.
வலுக்கும் கண்டனம்
அதாவது ஆர்ப்பாட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம், ''அப்துல் கலாம் கனவு காணச் சொன்னார். ஸ்டாலின் ஒரு படி மேலே போய், உங்கள் கனவைச் சொல்லுங்கள் நான் நிறைவேற்றி வைக்கிறேன் என்கிறார். ஒருவன் எனக்கு நயன்தாரா வேண்டும் என்று கனவு கண்டால், ஸ்டாலின் அதைச் செய்து கொடுப்பாரா?'' என்று சர்ச்சையாக பேசினார். தமிழக பெண்களை பாதுகாப்போம் என்று கூறி நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒரு பெண்ணை இழிவுப்படுத்தி பேசிய சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கனிமொழி ஆவேசம்
திமுக எம்.பி. கனிமொழி நயன்தாராவை சீண்டிய சி.வி.சண்முகத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''அரசியல் நாகரிகமோ, அடிப்படை அறமோ அதிமுகவினருக்கு என்றும் இருந்ததில்லை. அதனால், பெண்களை இழிவு படுத்துவதையே வாடிக்கையாக வைத்திருக்கும் தனது கட்சியைச் சார்ந்த இந்த நபரின் அருவருக்கத்தக்கப் பேச்சுக்கு எதிர்க்கட்சித் தலைவர் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்ப்பது வீண்'' என்று கூறியுள்ளார்.
செல்வபெருந்தகையும் கண்டனம்
மேலும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை சி.வி.சண்முகத்துக்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்ட பதிவில், ''தமிழ்நாட்டின் முதல்வர் அவர்கள் குறித்தும் மற்றும் நடிகை நயன்தாரா குறித்தும் அவமதிப்பாக கருத்து தெரிவித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், ராஜ்ய சபா உறுப்பினருமான சி.வி.சண்முகம் பேச்சை வன்மையாக கண்டிக்கின்றேன்.
ஒரு மக்கள் பிரதிநிதியாக பொறுப்பு வகிக்கும் நிலையில், பெண்களின் மரியாதையை புண்படுத்தும் வகையில் இத்தகைய தரக்குறைவான கருத்துகளை வெளியிடுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. குறிப்பாக, பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசப்படும் ஒரு மேடையில் கூட இவ்வாறான அவமதிப்பு நிறைந்த பேச்சு இடம்பெறுவது மிகுந்த வேதனையளிக்கிறது.
சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும்
இத்தகைய பேச்சுகள் பெண்களை பொருளாக்கும் மனப்போக்கை வெளிப்படுத்துவதோடு, சமூகத்தில் தவறான முன்னுதாரணத்தையும் உருவாக்கும். ஏற்கனவே, நீதிமன்றம் அவருடைய அவதூறு மற்றும் அநாகரீக பேச்சை வன்மையாகக் கண்டித்தும், அவர் போக்கில் எந்தவித மாற்றமும் தெரியவில்லை. எனவே, சி.வி.சண்முகம் அவர்கள் தமது கருத்துக்கு பொதுமக்கள் முன்னிலையில் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இத்தகைய பேச்சுகளை தவிர்க்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

