- Home
- Tamil Nadu News
- TN Weather Update: இன்று 4 மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட்; 13 மாவட்டங்களில் கனமழை.. உங்க ஊர் இருக்கா?
TN Weather Update: இன்று 4 மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட்; 13 மாவட்டங்களில் கனமழை.. உங்க ஊர் இருக்கா?
TN Weather Update: தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட்
தமிழகத்தில் ஒருபக்கம் வெயிலும் மறுபக்கம் பரவலாக மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலில் வாடிப்போய் இருந்த ஒரு சில மாவட்ட மக்களுக்கு நிம்மதி பிறந்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழையும் (ஆரஞ்ச் அலர்ட்), 13 மாவட்டங்களில் கனமழையும் பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
12 மாவட்டங்களில் கனமழை
அதாவது ஜூன் 6ஆம் தேதியான இன்று (சனிக்கிழமை) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பூர், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை எந்தெந்த மாவட்டங்களில் மழை?
ஜூன் 7ஆம் தேதியான நாளை (ஞாயிற்றுக்கிழமை) கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
வெயில் குறையும்; மக்களுக்கு ஆறுதல்
ஜூன் 8ம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் 6ஆம் தேதி முதல் 9ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெயில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2-3° செல்சியஸ் வரை குறையக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

