1000 ரூபாய் உதவித்தொகை திட்டம்.! நிபந்தனைகள் தளர்வு- தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
'புதுமைப் பெண்' மற்றும் 'தமிழ்ப்புதல்வன்' திட்டங்களின் கீழ் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை திருநங்கையர்களுக்கு நீக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் உதவித்தொகை திட்டம்
தமிழக அரசு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மகளிர், மாணவர்கள், திருநங்கைகள் என ஒவ்வொருக்கும் பயன் அளிக்கும் வகையில் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன் படி தமிழ்நாட்டில் உள்ள தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் நிதி உதவி வழங்குவதன் மூலம் பெண்களின் பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிக்கவும்,
அவர்களின் உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கவும் பெரிதும் உதவியாக உள்ளது.இதே போல அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும் எச்.ஐ.வி தொற்றுள்ள குழந்தைகளுக்கு மாதம் 1,000 ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாணவர்களுக்கான உயர்கல்வித்திட்டம்
இந்த நிலையில் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை திட்டத்தில் பல்வேறு நிபந்தனைகள் உள்ளது. அதனை தளர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவிகளின் உயர்கல்வியை ஊக்குவிக்க 05.09.2022 அன்று 'புதுமைப் பெண் திட்டம்' தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்படிப்பு ஆகியவற்றை இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1,000/-வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்க, 09.08.2024 அன்று 'தமிழ்ப்புதல்வன் திட்டம்' தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு உயர்கல்வியில் மாதம் ரூ.1.000/- ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
திருநங்கைகளுக்கு ஆயிரம் ரூபாய் உயர்கல்வித்திட்டம்
மேலும், புதுமைப் பெண் திட்டம்' அரசு உதவி பெறும் தமிழ்வழிப் பள்ளி மாணவிகளுக்கும் 30.12.2024 அன்று விரிவுபடுத்தப்பட்டது. நாட்டிற்கே முன்னோடியாக, திருநங்கை, திருநம்பி மற்றும் இடைபாலினத்தவர்களின் நல்வாழ்விற்காகப் பல்வேறு புதுமையான திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இவர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டையும், வாழ்க்கையில் வெற்றிபெறவும் உயர்கல்வி இன்றியமையாதது என்பதை உணர்ந்து, நிதிநிலை அறிக்கையில் சிறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அந்த அறிவிப்பின்படி, 'புதுமைப் பெண்' மற்றும் 'தமிழ்ப்புதல்வன்' திட்டங்களின் கீழ் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000/- உதவித்தொகை வழங்கும் திட்டம் திருநங்கை, திருநம்பி மற்றும் இடைபாலினர் உள்ளிட்ட அனைத்து திருநங்கையர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
திருநங்கை உயர்கல்வி உதவி தொகை நிபந்தனைகள் தளர்வு
இதனைத் தொடர்ந்து, இத்திட்டங்களில் பயன்பெறுவதற்கான தகுதி வரம்புகளில் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை, திருநங்கை, திருநம்பி மற்றும் இடைபாலினர் உள்ளிட்ட அனைத்து திருநங்கையர்களுக்கும் முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது. இந்தத் தளர்வின்படி, மேற்கண்ட திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் திருநங்கை, திருநம்பி மற்றும் இடைபாலினர் உள்ளிட்ட அனைத்து திருநங்கையர்களும் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையினை சான்றாகச் சமர்ப்பித்து இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
திருநங்கைகள் விண்ணப்பிப்பது எப்படி.?
எனவே, பள்ளிப் படிப்பைப் முடித்து, தற்போது பட்டயம், பட்டயம் மற்றும் தொழிற்படிப்பு பயின்று வரும் திருநங்கை, திருநம்பி மற்றும் இடைபாலினர் உள்ளிட்ட அனைத்து திருநங்கையர்களும் உயர்கல்வியில் சேர்ந்து, தாங்கள் பயிலும் உயர்கல்வி நிறுவனத்தின் மூலம் 'புதுமைப் பெண் மற்றும் 'தமிழ்ப்புதல்வன்' திட்டங்களில் UMIS இணையதளம் மூலம் விண்ணப்பித்து, தங்களின் கல்வி இலக்குகளை அடைந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.