தமிழக அரசு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. சென்னையில் ஜூன் 27 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. பல்வேறு கல்வித் தகுதிகளை உடையவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.

Employment opportunities tamil nadu : தமிழக அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்திடும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசு பணியில் இணைய காத்திருப்பவர்களுக்காக டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு நடத்தி பணியாட்களை தேர்வு செய்து வருகிறது. இதற்காக இலவச பயிற்சி முகாமையும் வழங்கி வருகிறது. மேலும் தனியார் துறையில் வேலைவாய்ப்புகளை ஊக்குவிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. "நான் முதல்வன்" திட்டத்தின் மூலம் தமிழக இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு, தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு உதவி செய்யப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் 5,08,055 இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் வேலை பெற்றுள்ளனர்.

இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு

தமிழக அரசு, தொழில் முன்னேற்றத்திற்காகவும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களை ஊக்குவிக்கவும் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு, இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இளைஞர்கள் அதிக அளவில் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர். சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து 27.06.2025 (வெள்ளிக்கிழமை) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன.

8ஆம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை

இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை 32 கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது இம்முகாமில் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ. டிப்ளமோ, பொறியியல், கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி), ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு இரத்து செய்யப்படமாட்டாது.

எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை

வேலையளிக்கும் நிறுவனங்களும். வேலைதேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை.இம்முகாமில் கலந்துகொள்ளும் வேலை நாடுநர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் தங்கள் விவரங்களை தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் www.tnprivatejobs.tn.gov.in பதிவேற்றம் செய்யவேண்டும். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.