- Home
- Tamil Nadu News
- அமைச்சர் கே.என். நேரு வழக்கில் திடீர் திருப்பம்.. அதிர்ச்சி கொடுத்த சென்னை உயர்நீதிமன்றம்!
அமைச்சர் கே.என். நேரு வழக்கில் திடீர் திருப்பம்.. அதிர்ச்சி கொடுத்த சென்னை உயர்நீதிமன்றம்!
KN Nehru Case: அமைச்சர் கே.என்.நேரு மீது அமலாக்கத் துறை வழங்கிய தகவல்கள் வெறும் புகார் அல்ல. சோதனையின் அடிப்படையில் கிடைத்த ஆதாரங்கள் என்பதால் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட 2,538 பணியிடங்களுக்கு 25 லட்சம் ரூபாய் முதல் 35 லட்சம் ரூபாய் வரை லஞ்சப் பணம் வசூலிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை கடந்த 2025 அக்டோபர் 27-ம் தேதி கடிதம் ஒன்றை அனுப்பியது. இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியது.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் இந்த கடிதத்தின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக எம்.பி. இன்பதுரை மற்றும் மதுரையைச் சேர்ந்த ஆதிநாராயணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அமலாக்கத் துறை வழங்கிய தகவல்கள் வெறும் புகார் அல்ல. அது சோதனையின் அடிப்படையில் கிடைத்த ஆதாரங்கள் என்பதால் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
ஆனால் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் வழக்குப்பதிவு செய்யாத லஞ்ச ஒழிப்புத் துறைக்கு எதிராக அதிமுக எம்.பி. இன்பதுரை நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்தார். அதேபோல் அதிகாரிகள் நியமன முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசும், அமைச்சர் கே.என். நேரு தரப்பிலும் மறு ஆய்வு செய்யக்கோரி மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்த அனைத்து வழக்குகளும், தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கே.என்.நேரு தரப்பில், வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கும் முன் தனது தரப்பில் வாதங்களை முன் வைக்க வாய்ப்பளிக்கப்படவில்லை என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனகுறிப்பிட்டு உத்தரவில் கூறவில்லை. முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யவே உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
மேலும், இந்த வழக்கில் விரிவான வாதங்கள் வைக்க வேண்டும் என்பதால், விசாரணையை கோடை விடுமுறைக்கு பின் ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அதுவரை வழக்குப்பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் எனக் கோரப்பட்டது. இதையடுத்து, அரசு மற்றும் கே.என்.நேருவின் மறு ஆய்வு மனுக்களையும், இன்பதுரையின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் ஜூன் 4-வது வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

