- Home
- Tamil Nadu News
- அடுத்த 3 மணிநேரம்! கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அலறவிடப்போகுதாம் மழை! வானிலை மையம் அலர்ட்!
அடுத்த 3 மணிநேரம்! கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அலறவிடப்போகுதாம் மழை! வானிலை மையம் அலர்ட்!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்த வெயிலுக்குப் பிறகு, சென்னையில் பகலில் வெயிலும் மாலையில் மழையும் பெய்து வருகிறது.

வாட்டி வதைத்து வந்த வெயில்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பொதுமக்களை வாட்டி வதைத்து வந்தது வெயில். பல்வேறு இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கே அஞ்சு நடுங்கினர். குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாகவே பகல் நேரங்களில் வெயிலும் மாலை நேரத்தில் மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையின் நிலவரம் என்ன?
அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
அடுத்த 3 மணிநேரத்தில் மழை
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் (அதாவது காலை 10 மணிவரை) 6 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.