- Home
- Tamil Nadu News
- அஜித்குமார் மரணத்தில் நிகிதா அளித்தது பொய் புகார்.. CBI அதிரடி ரிபோர்ட்..! ஆக்ரோஷமான நீதிபதி
அஜித்குமார் மரணத்தில் நிகிதா அளித்தது பொய் புகார்.. CBI அதிரடி ரிபோர்ட்..! ஆக்ரோஷமான நீதிபதி
மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் காவலர்களால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்துள்ள சிபிஐ, அஜித்குமார் மீதான நிகிதாவின் நகை திருட்டு புகாரில் உண்மை இல்லை என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தையே உலுக்கிய அஜித்குமார் மரணம்
2025ம் ஆண்டு ஜூன் மாதம் மடப்புரம் கோவில் காவலாளியாக இருந்த அஜித்குமார் என்ற இளைஞர் மீது கோவிலுக்கு வந்த நிகிதா என்ற பெண் அளித்த நகை திருட்டு புகாரில் கோவில் காவலாளி கைது செய்யப்பட்டார். பின்னர் உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக காவலாளி அஜித்குமார் காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை உருவாக்கியது. மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அடித்தே கொலை செய்த போலீஸ்..
சிறையில் உள்ள காவலர்கள் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். மேலும் இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில் சிபிஐ அதிகாரிகள் இன்று வழக்கு தொர்பான அறிக்கையை தாக்கல் செய்திருந்தனர். அந்த அறிக்கையில், “காவலாளி மீதான நிகிதாவின் நகை திருட்டு புகாரில் உண்மை இல்லை. மேலும் உயர் அதிகாரிகள் அளித்த அழுத்தம் காரணமாகவே இளைஞர் கொடூரமாக தாக்கப்பட்டு அவர் உயிரிழந்துள்ளார்” என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனம் பதறுகிறது - நீதிபதி வேதனை
நிகிதா அளித்தது பொய் புகார் என்று தெரிந்ததும் ஆவேசமடைந்த நீதிபதி ஸ்ரீமதி ஒன்றுமே இல்லாத விவகாரத்தில் ஒருவரை அடித்தே கொலை செய்துள்ளீர்கள். இந்த வழக்கில் யராக இருந்தாலும் வழக்கு நிறைவடையும் வரை சிறையிலேயே இருக்க வேண்டும். இந்த வழக்கில் காவலர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். காவலர்களின் செயல்பாடுகளைப் பார்த்தால் மனம் பதறுவதாக நீதிபதி காட்டமாக தெரிவித்துள்ளார்.
நிகிதா மீது நடவடிக்கை..
மேலும் நகை மாயமானதாக பொய் புகார் அளித்த நிகிதா மீது மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்தும் நீதிபதி கேள்வி எழுப்பிய நிலையில் பொய் புகார் தொடர்பாக தனியாக அறிக்கை தாக்கல் செய்வதாக சிபிஐ அதிகாரிகள் கூறியதை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

