- Home
- Tamil Nadu News
- இலவசமாக அறுபடை வீடு சுற்றுலா.! பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அறநிலையத்துறை
இலவசமாக அறுபடை வீடு சுற்றுலா.! பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அறநிலையத்துறை
தமிழக அறநிலையத்துறை சார்பில் அறுபடை வீடு ஆன்மிக பயணம் மூலம் 2024-2025 நிதியாண்டில் 2022 மூத்த குடிமக்கள் பயனடைந்துள்ளனர். திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி உட்பட ஆறு முருகன் கோயில்களுக்கு கட்டணமில்லா பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அறநிலையத்துறை சார்பாக எப்போதும் இல்லாத வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் படி கோயில்களில் குடமுழுக்கு, அன்னதான திட்டம், கோயில்களுக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்பு உள்ளிட்டவைகள் மட்டுமின்றி, அம்மன் கோயில் சுற்றுலா, பெருமாள் கோயில் ஒரு நாள் சுற்றுலா, ராமேஸ்வரம்- காசி சுற்றுலா போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அறுபடை வீடு ஆன்மிக பயணமும் தமிழக அரசால் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.
அறுபடை வீடு சுற்றுலா
இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் மூலம் 2024-2025 ஆம் நிதியாண்டில் அரசு நிதியில் 2022 மூத்த குடிமக்கள் பயன்பெற்றுள்ளனர் என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ் கடவுள் என்று போற்றப்படுகின்ற முருகப் பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றிற்கு மூத்த குடிமக்கள், ஒரேமுறையாக சென்று தரிசனம் செய்திடும் வகையில் கட்டணமில்லாமல் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட 200 பக்தர்கள் வீதம் இதுவரை 1.822 மூத்த குடிமக்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
200 மூத்த குடிமக்கள் அறுபடை வீடு சுற்றுலா
நேற்றைய தினம் (04.03.2025) கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம் ஆகிய மண்டலங்களை சேர்ந்த 200 மூத்த குடிமக்கள் திருத்தணி. அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலிருந்து சுவாமி தரிசனம் செய்து அறுபடை வீடுகளுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.
இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்ற மூத்த குடிமக்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளுடன் போர்வை, துண்டு. குளியல் சோப், டூத் பிரஷ், பேஸ்ட், முகம் பார்க்கும் கண்ணாடி, தேங்காய் எண்ணெய், சீப்பு போன்ற பொருட்கள் அடங்கிய பயணவழிப் பைகள் அறநிலையத்துறை சார்பாக வழங்கப்படுகின்றன.
2,022 மூத்த குடிமக்கள் பயன்
மேலும், பக்தர்களுக்கு உதவியாக செயல் அலுவலர்கள், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் மருத்துவ குழுவினரும் உடன் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்ற மூத்த குடிமக்கள் பயணம் சிறப்பாகவும், மிகுந்த மனநிறைவை தந்ததாகவும் தெரிவித்திருந்தனர்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் மூலம் 2024 2025 ஆம் நிதியாண்டில் அரசு நிதியில் 2,022 மூத்த குடிமக்கள் பயன்பெற்றுள்ளனர் என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.