- Home
- Tamil Nadu News
- அஜித்குமார் தம்பி நவீனுக்கு என்ன ஆச்சு! மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதியால் பரபரப்பு!
அஜித்குமார் தம்பி நவீனுக்கு என்ன ஆச்சு! மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதியால் பரபரப்பு!
திருப்புவனம் அருகே கோவில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில், அவரது தம்பி நவீன்குமாரும் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீஸ் தாக்குதலால் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்துள்ள மடப்புரம் பத்தரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தவர் அஜித்குமார். நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில் அஜித்குமாரை அழைத்து சென்று போலீசார் கொடூரமாக தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணையின் போது அஜித்குமாரை இரும்பு கம்பியால் தாக்கும் வீடியோ வெளியானதை அடுத்து 5 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அஜித்குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். தவெக தலைவர் நடிகர் விஜய், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் அஜித்குமார் குடும்பத்துக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். கோவில் காவலாளி அஜித்குமாரின் தம்பி நவீன்குமாருக்கு அரசு பணியும், இலவச வீட்டுமனைப் பட்டாவும், முதற்கட்டமாக அரசு தரப்பில் 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. அஜித்குமாரின் உடலில் மூளை உள்ளிட்ட இடங்களில் ரத்தக் கசிவும், 50க்கும் அதிகமாக இடங்களில் காயம் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. குறிப்பாக அவரின் உடம்பில் சிகரெட் சூடும், மிளகாய் பொடி கலந்த நீரை ஊற்றியும் சித்ரவதை செய்ததும் தெரியவந்தது. இதனிடையே, விசாரணையின் போது அஜித்குமாரையும், தன்னையும் போலீசார் கொடூரமாக தாக்கியதாக அவரது தம்பி நவீன் குமார் கூறியிருந்தார்.
இந்நிலையில் அஜித்குமாரின் தம்பி நவீன்குமாரும் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் போலீசார் தாக்கியதில் அஜித்தின் தம்பி நவீனுக்கு இடது காலில் ரத்தக்கட்டு இருப்பது உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது. காயம் தொடர்பாக நவீனிடம் திருப்புவனம் காவல் நிலைய அய்வாளர் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.