- Home
- Tamil Nadu News
- கோயம்பத்தூர்
- அண்ணா பெல்ட்டால் அடிக்காதீங்க! விட்டுவிடுங்க! நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு கடந்து வந்த பாதை!
அண்ணா பெல்ட்டால் அடிக்காதீங்க! விட்டுவிடுங்க! நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு கடந்து வந்த பாதை!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாலியல் வழக்கில் 9 பேர் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரம் இன்று பகல் 12 மணிக்கு வெளியாகும்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாலியல் வழக்கு நாட்டையே உலுக்கியது. கூட்டு பாலியலில் ஈடுபட்ட கும்பல் இளம்பெண் ஒருவர் அவர்களிடம் கெஞ்சும் வீடியோ ஒன்று வைரலானது. அதில் அண்ணா பெல்ட்டால் அடிக்காதீங்க.. என்னை விட்டுவிடுங்க என கதறும் அதிர்ச்சி வீடியோ வெளியானது. அதுமட்டுமல்லாமல் கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள், திருமணமான பெண்கள் என்று பலரை ஆசைவார்த்தை கூறி பழகி பிறகு வீடியோ எடுத்து மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து வந்தனர்.
அதிமுக ஆட்சியில் நடந்த கொடூர சம்பவம்
அதிமுக ஆட்சியின் போது வெளிச்சத்துக்கு வந்த இந்த சம்பவத்தால் அப்போது எதிர்க்கட்சியான திமுக போராட்டத்தில் ஈடுபட்டது. இந்த வழக்கு அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டது அதிமுக பிரமுகர்களின் வாரிசுகளின் பெயர்கள் அடிப்பட்டன. பண வசதி படைத்த இளைஞர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்செயல் தொடர்பாக, பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் புகார் அளித்ததன் பேரில்
சபரி ராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய ஐந்து பேர் 2019-ம் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டனர். பின்னர் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, அதன்பிறகு, சிபிஐ-க்கு மாற்றம் செய்யப்பட்டது. மேலும், அதிமுக நிர்வாகிகளான ஹேரேன் பால் (29), பாபு என்கிற பைக் பாபு (34), அருளானந்தம் (34), அருண்குமார் ஆகிய 4 பேர் கடந்த 2021-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். அப்போது அதிமுக ஆட்சி என்பதால் காவல்துறை குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்படுவதாக புகார் எழுந்தது. இவர்கள் மீது பாலியல் வன்கொடுமை, அத்துமீறல், கூட்டுச்சதி, தடயங்கள் அழிப்பு உள்பட 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை மகளிர் நீதிமன்றம்
இது முக்கியமான வழக்கு என்பதால் சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில், கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகாமல் இருக்க மூடப்பட்ட அறையில் மிக ரகசியமாக நீதிமன்ற விசாரணை நடைபெற்றது. சிபிஐ அதிகாரிகள், வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. அந்த அளவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இவ்வழக்கில், 50-க்கும் மேற்பட்ட அரசுத்தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட 8 பெண்கள் வாக்குமூலம்
சுமார் 200 ஆவணங்கள், 40 மின்னணு தரவுகள் உள்பட பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் விசாரணைக்கு சேர்க்கப்பட்டு, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள் 8 பெண்கள் விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நேரடி வாக்குமூலம் அளித்தனர். இவ்வழக்கில், ஒவ்வொரு வாய்தாவின்போதும், குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் சேலம் சிறையில் இருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு வந்தனர். கைதான 9 பேரிடம், சட்ட விதிகள் 313-ன் கீழ் கேள்விகள் கேட்பதற்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, திருநாவுக்கரசு உள்பட 9 பேரும் கடந்த 5ம் தேதி சேலத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு, கோவை சிபிஐ நீதிமன்றத்தில், நீதிபதி ஆர்.நந்தினிதேவி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, ஒவ்வொருவரிடமும் சுமார் 50 கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு அவர்கள் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தனர். இந்த நடைமுறை வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
9 பேரும் குற்றவாளிகள் பரபரப்பு தீர்ப்பு
வழக்கில் அரசு மற்றும் எதிர் தரப்பு விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு மே 13-ம் தேதி வழங்கப்படும் என மகளிர் நீதிமன்றம் அறிவித்தது. இந்த வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினிதேவியை, கரூர் குடும்ப நல நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஆரம்பம் முதல் விசாரணை நடத்தி வரும் நீதிபதி நந்தினிதேவி, மறு உத்தரவு வரும் வரை அதே நீதிமன்றத்தில் பணிபுரிவார் என்று சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் தெரிவித்திருந்தார். இதனிடையே பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினிதேவி இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில் 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. இவர்களின் தண்டணை விவரம் இன்று பகல் 12 மணிக்கு வெளியாக உள்ளது. அரசு தரப்பில் குற்றவாளிகள் 9 பேரும் சாகும் வரை ஆயுள் தண்டணை வழங்க வேண்டும் என வாதம் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.