- Home
- Tamil Nadu News
- கோயம்பத்தூர்
- ஊட்டியை விடுங்க.. கோவையில் கட்டாயம் பார்க்க வேண்டிய குளு குளுவென இருக்கும் 10 இடங்கள்!
ஊட்டியை விடுங்க.. கோவையில் கட்டாயம் பார்க்க வேண்டிய குளு குளுவென இருக்கும் 10 இடங்கள்!
கோடை விடுமுறைக்கு ஊட்டி, கொடைக்கானலுக்கு மாற்றாக, கோயம்புத்தூரைச் சுற்றி பல சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இந்தக் கட்டுரை மருதமலை, வெள்ளியங்கிரி மலை, கோவை குற்றாலம், 10 முக்கிய இடங்களைப் பற்றி பார்ப்போம்.

கோவையில் கட்டாயம் பார்க்க வேண்டிய 10 இடங்கள்
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இதனால் வீடுகளில் பொதுமக்கள் இருக்க முடியாத அளவுக்கு வெப்பம் வாட்டி வதைத்து வருகின்றது. இதனிடையே தற்போது பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குளுமையான இடங்களுக்கு சுற்றுலா செல்லலாம் என திட்டமிட்டு வருகின்றனர். அந்த வகையில் எப்போதும் கோடை விடுமுறைக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் இடம் ஊட்டி, கொடைக்கானலை விட கோவை மாவட்டத்தை சுற்றி பல சுற்றுலா தலங்கள் உள்ளன. அந்த வகையில் கோவையில் கட்டாயம் பார்க்க வேண்டிய 10 சுற்றுலா தலங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
மருதமலை
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன கோயிலில் முக்கியமானது மருதமலை முருகன கோயில். இக்கோவில் முருகனின் 7-வது படைவீடு என்று பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த முருகன் கோயிலில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிர்மபி வழியும். கோவை ரயில் நிலையத்தில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள இந்த கோயிலுக்கு செல்ல பேருந்து வசதி உள்ளது. அங்கு சென்று அடிவாரத்தில் இறங்கினால் அங்கிருந்து 1000 படிகட்டுகள் ஏறி மலை மீது ஏறியும், பேருந்தில் சென்றும் தரிசிக்கலாம்.
வெள்ளையங்கிரி மலை
கோவை பேருந்து நிலையத்தில் இருந்து 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது வெள்ளையங்கிரி மலை. அடர்ந்த காடு நிறைந்த யானைகள் மிகுந்த மலைப் பிரதேசம் என்பதால் இங்கு மாலை 6 மணிக்கு மேல் நடமாடுவது ஆபத்தானது தான் என்றாலும் வெள்ளையங்கிரி மலையில் சித்ரா பௌர்ணமிக்கு ஆண்கள் அதிகமாக வருகிறார்கள். கிட்டத்தட்ட செங்குத்தான 7 மலைகளை தடி ஊன்றிக் கொண்டு கடந்து அங்குள்ள சிவபெருமானை தரிசனம் செய்கின்றனர். வரும் வழியிலேயே ஈஷா யோகா மையம் உள்ளது.
கோவை குற்றாலம்
கோவையில் இருந்து 31 கி.மீ தொலைவில் உள்ள கோவை குற்றாலம் அருவி கட்டாயம் பார்க்க வேண்டிய சுற்றுலா தலமாகும். வானுயர நிற்கும் மலைகள், அதற்கு மேல் இருக்கும் மேகக் கூட்டங்கள், பச்சை போர்வை போர்த்தியது போன்ற அடர்ந்த காடுகளுக்கு நடுவே நீரோடைகள், பேரருவி, சிற்றருவி என இயற்கை எழில் கொஞ்சும் கோவை குற்றாலம் அருவி அமைந்திருக்கிறது.
சிறுவாணி
உலகிலேயே இரண்டாவது சுவையான நீர் சிறுவானி. கோவையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் இந்த நீர் கேரள – தமிழக எல்லையில் பல்வேறு நீரோடைகள் வாயிலாக வந்து சிறுவாணி அணையில் வந்து சேர்கிறது. அதன் உபரிநீர் அங்கிருந்து சிறுவாணி ஆறாக கேரளாவில் பயணித்து பவானி நதியில் கலக்கிறது. சிறுவாணி அமைந்திருக்கும் இடம் கேரளா தான் என்றாலும், இந்த பகுதியை தரிசிக்க இரு மாநில சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டவரும் படை எடுத்து வருகின்றனர். கோவையில் இருந்து 40 கி.மீ தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளது. ஆனால் கடைசி 8 கி.மீ பயண தூரத்தை அடர்ந்த காட்டின் வழியே ஜீப் அல்லது வேன் மூலம் தான் கடக்க முடியும்.
குரங்கருவி
மங்கி ஃபால்ஸ் என்று அழைக்கப்படும் இந்த அருவி ஆழியாறில் இருந்து வால்பாறை செல்லும் சாலையில் சுமார் 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. கோவையின் முக்கிய சுற்றுலா தலங்களில் இதுவும் ஒன்று. இங்கு குரங்குகள் நடமாட்டம் அதிகம் இருக்கும் என்பதால் பொருட்களை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும்.
டாப் ஸ்லிப்
பொள்ளாச்சியில் இருந்து இரண்டரை மணி நேரம் பேருந்தில் பயணித்தால் டாப் ஸ்லிப் பகுதிக்கு செல்லலாம். இந்த இடம் வால்பாறை மலைகளுக்கு யானைகளின் புகலிடமாக இருக்கிறது. யானை சவாரி செய்யும் வசதியும் உண்டு. மேலும் இங்கிருந்து கொஞ்ச தூரத்தில் பரம்பிக்குளம் அணை உள்ளது. எனினும் காலை 8 மணியில் இருந்து மாலை 5 மணிக்குள் டாப் ஸ்லிப் சுற்றுலா திட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் வழியெங்கும் யானைகள் வருகை அதிகரிக்க தொடங்கி விடும்.
ஆழியாறு
கோவையில் 45 கி.மீ தொலைவில் பொள்ளாச்சி அமைந்துள்ளது, அங்கிருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மலையடிவாரத்தில் அமைந்துள்ள பிரம்மாண்ட அணையும் சுற்றுவட்டார பகுதியும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது ஆழியாறு அணை. இந்த அணையில் எந்த நேரமும் போட்டிங் வசதியும் உண்டு.
காடாம்பாறை அணை
குரங்கருவியில் இருந்து 10 கி.மீ தொலைவில் அட்டகட்டி. அங்கிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது காடாம்பாறை நீரேற்று அணைத்திட்டம். இந்த அணை சுற்று பகுதியை காணும் போதே இயற்கையின் அரிய பொக்கிஷத்தை கண்டு ரசிக்க முடியும்.
பர்லிக்காடு பரிசல் சவாரி
கோவை நகரில் இருந்து 50 கி.மீ தொலைவில் பில்லூர் அணை உள்ளது. இங்கு வனத்துறை சார்பில் பரிசல் சவாரி நடைபெறுகிறது சனி, ஞாயிறுகளில் மட்டுமே இங்கு பரிசல் சவாரி நடக்கும். அங்கு படகு சவாரி மட்டுமின்றி பாரம்பரிய உணவுகளான கேழ்வரகு களி, கம்மங்களி, கம்மஞ்சோறு, கருவாட்டுக்குழம்பு போன்ற உணவுகளும் கிடைக்கும்.
திருமூர்த்தி மலை
பொள்ளாச்சியில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது உடுமலை. அங்கிருந்து 18 கி.மீ தொலைவில் உள்ளது திருமூர்த்தி மலை. அணைக்கு சற்று தள்ளி படகு சவாரி நடக்கிறது. மேலும் இங்குகள்ள மலைச்சரிவில் அமணலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கிருந்து மலைச்சரிவுகளில் ஏறினால் 2 கி.மீ தொலைவில் பஞ்சலிங்க அருவி கொட்டுகிறது. கோடைக்காலங்களில் இங்கு சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம்.

